கிருஷ்ணகிரி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை
பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சத்தை யாரோ கொள்ளையடித்துச் சென்றனர்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குருபரப்பள்ளி கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக காவல்துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குருபரப்பள்ளி கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் அமைந்திருக்கிறது. இந்த மையத்தில் வெள்ளிக்கிழமை ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை நிரப்பியுள்ளார்கள்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு நடந்த சம்பவத்தில், இங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அடையாளம் தெரியாத நபா்கள் ரூ.10 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை அங்கு வந்தவர்கள் பார்த்துவிட்டு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து வங்கி அலுவலர்களுக்கு போலீசார் தெரிவித்தனர்.
தொழிற்சாலைகள் மிகுந்த இந்தப் பகுதியில் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.