முகப்பு
தற்போதைய செய்திகள்

வீடூர் அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் வீடூர் அணை நிரம்பியது.

Updated On : 1 டிசம்பர், 2024 at 11:11 AM
வீடூர் அணை.
பகிர்:

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக வீடூர் அணை நிரம்பியது. இதனால் பாதுகாப்பு கருதி அனைத்து கதவுகளையும் திறந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு, கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் வீடூர் அணை பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அதன் கொள்ளளவான 605 மில்லியன் கன அடியில் (32அடி) 487.52 மில்லியன் கன அடி(30.5அடி) நிரம்பியது அணைக்கு வினாடிக்கு 36, 203 கன அடி நீர் வரத் தொடங்கியது.

இதையடுத்து, அணை கண்காணிப்பு அதிகாரிகள் சுற்றுப்புறக் கரையோர கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சனிக்கிழமை இரவு 11:30 மணி அளவில் அபாய சங்கு ஒலியை எழுப்பினர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:30 மணி அளவில் அணையில் 9 கதவுகளையும் திறந்து, 36,203 கன அடி உபரி நீரை அணையிலிருந்து வெளியே திறந்து விட்டனர்.

அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதன் காரணமாக சங்கராபரணி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொண்டு வெளியேறியது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணி வரை வீடூர் அணைப்பகுதியில் 264 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

வீடூர் அணையின் நீர் வரத்துகளை நீர் வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா ஞாயிற்றுக்கிழமை காலை ஆய்வு செய்தார். உதவிச் செயற்பொறியாளர் ரமேஷ், உதவிப் பொறியாளர் பாபு ஆகியோர் அணை நீர்வரத்து குறித்து தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் .

விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமார் தலைமையில் காவல் ஆய்வாளர் பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தனிப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட போலீஸார் அணை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.