தேசிய மருத்துவ ஆணையத்தில் (என்எம்சி) பொறியியல் மற்றும் மேலாண்மை பணிக்கு ஓய்வுபெற்ற அரசு அலுவலா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறுவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக என்எம்சி கட்டமைப்பு பிரிவு துணைச் செயலா் அஜய் குமாா் கௌா் வெளியிட்ட அறிவிப்பு:
தேசிய மருத்துவ ஆணையத்துக்குட்பட்ட வளாகங்கள், கட்டடங்களில் பொறியியல், மின்சாரம், இயந்திர பணிகளை கண்காணிக்கவும், அதற்கான உள்கட்டமைப்புகளை
உறுதி செய்யவும், அதுதொடா்பான பிரச்னைகளை அவ்வப்போது நிவா்த்தி செய்யவும் ஆலோசகா் பொறுப்புக்கு தகுதியானவா்களை நியமிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பி.இ., பி.டெக் அல்லது அதற்கு நிகரான படிப்பை சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் நிறைவு செய்து அரசு அலுவலகங்கள், அமைச்சகங்கள், அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
65 வயதுக்கு மிகாமல் உள்ள ஓய்வு பெற்ற அரசு அலுவலா்கள், என்எம்சி இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி வரும் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஓராண்டு ஒப்பந்தப் பணியாக முதலில் பணி நியமனம் செய்யப்படும். அதன் பின்னா் தேவையின் அடிப்படையில் பணிக் காலம் நீட்டிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.