சென்னையில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலுக்கு தக்காரை நியமனம் செய்த அறநிலையத் துறையின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை நெற்குன்றத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே உள்ள திருவாலீஸ்வரர் - திரிபுரசுந்தரி கோயில் உள்ளது.
இக்கோயிலுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தக்கார் நியமனம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து ரவி கே.விஸ்வநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்புராயன் முன்பாக இன்று (ஜூலை 17) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அறநிலையத் துறை சிறப்பு வழக்குரைஞர் அருண் நடராஜன் ஆஜராகி அந்தக் கோயில் செயல் அலுவலர் சார்பில் பதில் மனுவை தாக்கல் செய்தார்.
மேலும், “நெற்குன்றத்தில் உள்ள திருவாலீஸ்வரர் - திரிபுரசுந்தரி கோயில் 700 ஆண்டுகள் பழமையானது என்பது அங்கு கிடைத்த கல்வெட்டுகள் மூலமும், அறநிலையத் துறை தொல்லியல் துறை ஆய்வாளர் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி 700 ஆண்டுகள் பழமையான கோயிலை கிரையப்பத்திரம் மூலமாக வாங்கவோ விற்கவோ முடியாது. மேலும், தாத்தா பேரனுக்கு எவ்வாறு கிரையப்பத்திரம் எழுதி முடியும்” என்று அவர் வாதிட்டார்.
இந்த நிலையில், திருவாலீஸ்வரர் திரிபுரசுந்தரி கோயிலுக்கு நியமிக்கப்பட்ட தக்கார் நியமனம் செல்லும் என்று நீதிபதி பவானி சுப்பராயன் உத்தரவிட்டார். மேலும், அடுத்த கட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.