முகப்பு
தற்போதைய செய்திகள்

சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை: 3 பேர் கைது

சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியில் நடந்த ஆணவப் படுகொலை சம்பவத்தில் பெண்ணின் சகோதரர்கள் இருவர் உள்பட மூவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On : 25 ஜூலை 2024, 9:55 am IST
கார்த்திக்பாண்டியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய நந்தியின் சகோதரர்கள் பாலமுருகன், தனபாலன் மற்றும் அவர்களது நண்பர் சிவா
பகிர்:

விருதுநகர்: சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியில் நடந்த ஆணவப் படுகொலை சம்பவத்தில் பெண்ணின் சகோதரர்கள் இருவர் உள்பட மூவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திராநகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் கார்த்திக்பாண்டி(26). இவர் சிவகாசி கங்காகுளம் சாலையில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவரும் சிவகாசி அருகே அய்யம்பட்டியை சேர்ந்த பொன்னையா மகள் நந்தியும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில், இவர்கள் இருவரும் 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது காதல் திருமணத்திற்கு நந்தினி சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

காதல் தம்பதிகளான கார்த்திக் பாண்டியும்-நந்தியும் அய்யம்பட்டில் இருந்து நாள்தோறும் இருசக்கர வாகனத்தில் சிவகாசி ரிசர்வ் லைன் பகுதிக்கு வேலைக்கு வந்து சென்றனர். நந்தினி அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு வேலை முடிந்து சூப்பர் மார்க்கெட் பகுதியில் கணவருக்காக நந்தினி காத்திருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக் பாண்டியை இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் பாண்டி மனைவி நந்தினி கண் முன்பே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட கார்த்திக் பாண்டி உடலை உடல்கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், காதல் திருமணம் செய்த 8 மாதங்களில் கார்த்திக் பாண்டியை அவரது மனைவி நந்தினியின் சகோதரர்கள் வெட்டிக் கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய நந்தியின் சகோதரர்கள் பாலமுருகன், தனபாலன் மற்றும் அவர்களது நண்பர் சிவா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து ஆணவப் படுகொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.