முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லி தமிழ்நாடு இல்லத்தில் ரூ.257 கோடியில் புதிய கட்டடங்கள்: அடிக்கல் நாட்டினார் முதல்வர்

தில்லி தமிழ்நாடு இல்லத்தில் ரூ.257 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு வெள்ளிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Updated On : 26 ஜூலை 2024, 1:38 pm IST
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் ரூ.257 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பகிர்:

புதுதில்லி: தில்லி தமிழ்நாடு இல்லத்தில் ரூ.257 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு வெள்ளிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக, புதுதில்லி சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் ரூ.257 கோடி புதிதாக கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், புதுதில்லி மிக தீவிர நில அதிர்வு மண்டலம் 4 ஆக மறுவகைப்படுத்தப்படுத்துள்ளதை கருத்தில் கொண்டு வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தின் பழைய கட்டடங்களை முழுவதுமாக இடித்து மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.

Advertisement

இதனிடையே, புதியதாக கட்டப்படவுள்ள இந்த கட்டடம் மிக தீவிர நில அதிர்வை எதிர்கொள்ளும் கட்டமைப்பாக வடிவமைக்கப்பட்டு, இந்திய தொழில்நுட்பக்கழகம், சென்னை மூலம் ஆய்வு செய்யப்பட்டது.

அதன்படி, விரிவான வடிவமைப்பு மற்றும் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட அலுவலகங்களிலிருந்து உரிய ஒப்புதல்கள் பெறப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் பொதுத் துறையால் தில்லி தமிழ்நாடு இல்லத்தை மறுசீரமைத்து புதிய கட்டடங்களை கட்டுவதற்கு ரூ.257 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த புதிய கட்டடத்தில் மிக முக்கிய பிரமுகர் புகுதி, விருந்தினர் மாளிகை பகுதி மற்றும் அலுவலர்கள் குடியிருப்புப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த கட்டடம், 3 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்களைக் கொண்டதாகவும், மொத்தம் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது.

மேலும், மிக முக்கிய பிரமுகர் அறை, 39 முக்கிய பிரமுகர்கள் அறைகள், 60 உயர்தர அறைகள், 72 படுக்கை வசதிகள் கொண்ட தங்கும் கூடம், பல்நோக்கு அரங்கம், 3 உணவருந்தும் அறைகள், காத்திருப்பு அறைகள், கண்காட்சி அறை, மிக முக்கிய பிரமுகர்களின் முகாம் அலுவலகம், சந்திப்பு அறைகள், உடற்பயிற்சி மையம், வணிக மையம், நுாலகம் மற்றும் பல்வேறு வசதிகளுடன் இந்த புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.