வயநாடு நிலச்சரிவு: தொழிலதிபர் அதானி ரூ. 5 கோடி நிவாரண நிதி!
வயநாடு நிலச்சரிவுக்கு தொழிலதிபர் கௌதம் அதானி ரூ. 5 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு தொழிலதிபர் கௌதம் அதானி ரூ. 5 கோடி நிவாரண நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, மலைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இரண்டாவது நாளாக மோசமான வானிலைக்கு இடையே ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, காவல் துறையினா், தீயணைப்புப் படையினா் உள்ளிட்ட பல்வேறு முகமைகள் முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்தச் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்களும், நடிகர், நடிகைகள் பலரும் நிவாரண உதவிகளை அளித்து வருகின்றன. இதே போல இந்தியாவின் பிரபல தொழிலதிபர் கௌதம் அதானியும் ரூ. 5 கோடி நிவாரண நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கௌதம் அதானி தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “வயநாட்டில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான உயிரிழப்புக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நினைத்து என் இதயம் வலிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் அதானி குழுமம் கேரளத்துடன் உறுதுணையாக நிற்கிறது. கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 5 கோடி நன்கொடையுடன் எங்களது ஆதரவை பணிவுடன் வழங்குகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.