'அறிவார்ந்த வாக்காளர்களே’: நன்றி தெரிவித்த அகிலேஷ் யாதவ்!
உத்திரப்பிரதேசத்தில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நன்றி தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மையின மக்களின் பங்களிப்பில் கிடைத்த வெற்றி என்றும், கூட்டணி முயற்சியே இதற்கு காரணம் என்று முன்னாள் உ.பி முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது அன்புக்குரிய அறிவார்ந்த வாக்காளர்களே, உத்திரப்பிரதேசத்தில் இந்தியக் கூட்டணியின் இந்த வெற்றியானது தலித்-பகுஜன் மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி.
மேலும், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, பழங்குடியின, உயர்வகுப்பில் பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் கிடைத்த வெற்றி. நமது அரசியலமைப்பைக் காப்பாற்ற அனைவரும் தோளோடு தோள் நின்று போராடியுள்ளனர்.
இது அயராத உழைப்பால், அச்சமற்ற மற்றும் நேர்மையான முயற்சிக்கு கிடைத்த வெற்றி. அரசியல் சாசனத்தை தங்கள் உயிரெனக் கருதும் அரசியலமைப்புப் பாதுகாவலர்களின் வெற்றி. மேலும், நேர்மறையான அரசியல் மற்றும் உண்மையான மற்றும் நல்ல உள்ளம் கொண்ட மக்களின் வெற்றி" என்று கூறியுள்ளார்.
"இம்முறை மக்கள் வெற்றி பெற்றுள்ளனர், ஆட்சியாளர்கள் அல்ல. நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் முழுப்பொறுப்புடன் காப்பாற்றுவோம். வரவிருக்கும் நல்ல தொடக்கத்துக்கு மனமார்ந்த நன்றி. மக்கள் வாழ்க!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியக் கூட்டணி உத்திரப்பிரதேசத்தில் 80-க்கு 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில், சமாஜ்வாதி கட்சி மட்டும் 37 இடங்களைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.