இந்திய ஊடகங்களில் புரட்சியை ஏற்படுத்தியவர் ராமோஜி ராவ்: பிரதமர் மோடி அஞ்சலி!
இந்திய ஊடகங்களில் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்கு பார்வையாளர் என ராமோஜி ராவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்திய ஊடகத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்கு பார்வையாளரான ராமோஜி ராவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ராமோஜி ராவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் இந்திய ஊடகங்களில் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்கு பார்வையாளர். அவரது செழுமையான பங்களிப்புகள் பத்திரிகை மற்றும் திரைப்பட உலகில் அழியாத முத்திரைகளை பதித்துள்ளன. அவரது குறிப்பிடத்தக்க முயற்சிகள் மூலம், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உலகில் புதுமை சிறப்பிற்கான புதிய தரங்களை அமைத்தார். ராமோஜி ராவ் இந்தியாவின் வளர்ச்சியில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். என்னுடைய அதிர்ஷ்டத்தால், அவருடன் பழகுவதற்கும் அவருடைய ஞானத்தால் பயனடைவதற்கும் பல வாய்ப்புகளைப் பெற்றுள்ளேன்.
இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது இரங்கல், ஓம் சாந்தி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மூத்த பத்திரிகையாளரும், தயாரிப்பாளர் மற்றும் ஈநாடு குழும நிறுவனங்கள், ராமோஜி குழுமத்தின் தலைவருமான சி.எச். ராமோஜி ராவ்(88) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் காலமானார்.