கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 2 இளைஞர்கள் சாவு
கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய 2 இளைஞா்களின் உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய 2 இளைஞா்களின் உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், ஜடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ் (22), கார்த்திகேயன் (22), மொரப்பூரைச் சேர்ந்தவர் அக்மல் (23), இவர்கள் மூன்று பேரும், ஜெயராஜின் உறவினரின் ஈமச்சடங்கில் பங்கேற்பதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேட்டிற்கு வெள்ளிக்கிழமை வந்தனர்.
பின்னர், இவர்கள் உறவினர்களுடன் சேர்ந்து அந்தப் பகுதியில் பாயும் தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடினர். மாலை உறவினர்கள் வீடு திரும்பிய நிலையில், இந்த மூன்று பேரும், தென்பெண்ணை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், ஜெயராஜ், கார்த்திகேயன் ஆகிய இருவரும் நீரில் மூழ்கினர்.
இதையடுத்து அருகில் இருந்த அக்மல் இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளார்.
காப்பாற்ற முடியாத நிலையில் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலை அடுத்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் இரண்டு பேரையும் சடலமாக தீயணைப்புத் துறை வீரர்கள் மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து, போச்சம்பள்ளி போலீசார், வழக்குப் பதித்து விசாரணை செய்து வருகின்றனர்.