கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்,ஊத்தங்கரை வட்டம், சென்னானூர் கிராமத்தில் நடைபெறும் அகழ்வாய்வில் சுடு மண்ணாலான முத்திரை வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சென்னானூரில் புதிய கற்கால சான்றுகளை சேகரிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்குமுன் நடைபெற்ற அகழாய்வின்போது பழங்காலப் பொருள்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இங்குள்ள மலையடிவாரத்தின் மேற்பரப்பில் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற்கருவிகள், புதிய கற்கால கைக்கோடாரிகள், இரும்புக் காலத்தைச் சோ்ந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரும்புக் கழிவுகள், பாறை ஓவியங்கள் எனப் பொருள்கள் கிடைத்துள்ளன.
இங்குள்ள ஒரு கிணற்றில் கிடைத்த செங்கற்கள் 2,000 ஆண்டுகள் பழமையானவை என்பதால் இந்த இடம் சங்ககால மக்களின் வாழ்விடமாக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது.
இதையடுத்து இங்கு அகழாய்வுப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக இங்கு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திங்கள்கிழமை, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லால் ஆன உடைந்த நிலையில் புதிய கற்காலத்தைச் சோ்ந்த கருவி ஒன்றை அகழாய்வுக் குழுவினா் கண்டெடுத்தனா்.
இந்த நிலையில் அகழ்வாய்வு நடைபெற்று வரும் பகுதியில் ஏ2 என்னும் அகழாய்வு குழியில் 61 செ.மீ ஆழத்தில் சுடுமண் முத்திரை கிடைத்தது. இந்த முத்திரையின் நீளம் 4.5 செ.மீ மற்றும் விட்டம் 3.2 செ.மீ கொண்டு காணப்படுகிறது. இந்த முத்திரையானது மண் பானையின் விளிம்பு பகுதியை அழகு படுத்துவதற்காக இந்த முத்திரையை பயன்படுத்தி இருக்கலாம் என வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.