முகப்பு
தற்போதைய செய்திகள்

சிஏஏ சட்டத்தை தடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை: அமித் ஷா

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் -அமித் ஷா திட்டவட்டம்

Updated On : 14 மார்ச் 2024, 9:54 am IST
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
பகிர்:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பல தரப்பினரின் எதிர்ப்பை மீறி குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம கடந்த திங்கள்கிழமை அமல்படுத்தியது.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அமித் ஷா அளித்த பேட்டியில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

மேலும், அமித் ஷா பேசியதாவது:

இந்திய குடியுரிமையை உறுதி செய்வது நமது உரிமை. அதில், ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். சிஏஏ சட்டத்தை மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் இதுகுறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்த சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை.

2019 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றியுள்ளோம். பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அளிப்போம் என்று வாக்குறுதி அளித்தோம். அதன்படி, சிஏஏ சட்டத்தை நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமல்படுத்தினோம். ஆனால், கரோனாவால் நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

சிஏஏ குறித்து கடந்த 4 ஆண்டுகளில் 41 முறை பல்வேறு தரப்பினரிடையே பேசியுள்ளேன். சிஏஏ சட்டத்தால் சிறுபான்மையினரின் உரிமை பறிக்கப்படாது என்று உறுதி அளித்துள்ளேன்.

சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூற மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை. சட்டத்தை இயற்றுவதற்கும், அமல்படுத்துவதற்கும் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. தேர்தலுக்கு பின்னர் அனைத்து மாநிலங்களும் சட்டத்தை அமல்படுத்த ஒத்துழைப்பு தருவார்கள் என நினைக்கிறேன். அரசியல் ஆதாயத்துக்காக தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.

சிஏஏ சட்டத்தை ஏன் எதிர்க்கிறார் என்று ராகுல் காந்தி பொதுமக்கள் மத்தியில் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். அவர் கட்சியின் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும்.

ராகுல் காந்தி, ஓவைசி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சிஏஏ விவகாரத்தில் அரசியல் செய்கின்றனர்.” எனத் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோர் அறிவித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.