கொல்கத்தா வந்தார் அமித் ஷா! மேற்கு வங்கத்தின் பாஜக முதல்வர் யார்? இன்று வெளியாகும் அறிவிப்பு!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொல்கத்தா சென்றுள்ளார்...
மேற்கு வங்க தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொல்கத்தா சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி முதல்முறையாக ஆட்சியமைக்கின்றது. இதையடுத்து, பாஜக தலைமையிலான அரசின் முதல்வர் வேட்பாளர் யாரென்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்து வரும் சுவேந்து அதிகாரி முதல்வராகப் பதவியேற்கக் கூடும் என பெருவாரியான கருத்து நிலவி வருகின்றது.
Advertisement
இந்த நிலையில், முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை (மே 8) காலை கொல்கத்தா சென்றடைந்தார். கொல்கத்தாவில் இருந்து நேரடியாக வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள காளி கோவிலில் வழிபாடு செய்தார்.
இதையடுத்து, நியூ டவுன் பகுதியில் அமைந்துள்ள பிஸ்வா பங்களா அரங்கில் வெற்றி பெற்றுள்ள பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில், மேற்கு வங்கத்தின் முதல்வர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர், தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர் வேட்பாளர் உடனடியாக ஆளுநர் மாளிகையில் அம்மாநில ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவார் எனவும், நாளை காலை மேற்கு வங்கத்தின் புதிய அரசு பொறுப்பேற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு வங்கத்தின் புதிய அரசின் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக ஆளும் பிற மாநிலங்களின் முதல்வர்கள் ஆகியோர் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.