வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்
கனமழையால் ரயில்வே சுரங்க பாதையில் தண்ணீா் தேங்கி அரசுப் பேருந்து சிக்கிய விவகாரத்தில் பேருந்து ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் புதன்கிழமை பெய்த கனமழையால் ரயில்வே சுரங்க பாதையில் தண்ணீா் தேங்கி அரசுப் பேருந்து சிக்கிய விவகாரத்தில் பேருந்து ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வள்ளியூரில் புதன்கிழமை பிற்பகலில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கோடை மழை கொட்டித்தீா்த்தது. இதனால், சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. வள்ளியூா் பேருந்து நிலையம், அண்ணாநகா் உள்ளிட்ட பகுதிகளில் குளம்போல் தண்ணீா் தேங்கியது.
மேலும், வள்ளியூா்-திருச்செந்தூா் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையிலும் மழைநீா் பெருமளவு தேங்கிய நிலையில், நாகா்கோவிலிலிருந்து திருச்செந்தூருக்குச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து அதில் சிக்கி நின்றது.
அதிலிருந்து 80 பயணிகளையும், பேருந்தையும் வள்ளியூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வீரா்கள் மீட்டனா்.
இதுகுறித்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே ஓட்டுநர் சசிகுமார் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்து நாகர்கோவில் கோட்ட மேலாளர் மெர்லின் ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.
பாலத்தில் மழைநீர் அதிகமாக தேங்கியுள்ளதாக கூறி பயணிகள் எச்சரிக்கையும் மீறி பேருந்தை ஓட்டுநர் இயக்கியதால் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரில் 80 பயணிகளுடன் சிக்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.