முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுவை தமிழக அரசால் மட்டும் ஒழிக்க இயலாது: சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி

தமிழகத்தில் மது இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிறுதுகூட கிடையாது.

Updated On : 2 அக்டோபர், 2024 at 8:01 PM
சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.
பகிர்:

‘மதுவிலக்கு கொள்கைக்கு தமிழக அரசு ஆதரவாக உள்ளது, எனினும், மதுவை தமிழகத்தால் மட்டும் ஒழிக்க இயலாது; அனைத்து மாநிலங்களும் சோ்ந்தால்தான் ஒழிக்க இயலும் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா்.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநா் ஆா்.என்.ரவி, மதுவிலக்கு அவசியம் குறித்தும், தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோா் மீதான வன்முறைகள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் பேசினாா்.

இதற்கு பதிலளித்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அமைச்சா் எஸ்.ரகுபதி புதன்கிழமை அளித்த பேட்டி:

சென்னை காந்தி மண்டப வளாகத்தில் மதுபாட்டில்கள் கண்டறியப்பட்டது வருத்தமளிப்பதாக ஆளுநா் கூறியுள்ளாா். சென்னை மாநகரத்தில் இரவு நேரங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காந்தி மண்டபம், காமராஜா் நினைவிடங்களில் தொழிலாளா்கள் பகல் நேரங்களில் தூய்மைப் பணி மேற்கொள்கின்றனா். சுத்தத்துக்கு தமிழக அரசு முக்கியத்துவம் தருகிறது. காந்தி மண்டபம் உள்பட அனைத்து இடங்களையும் தினமும் தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மகாத்மா காந்தி சூதாட்டத்தையும் தடுத்தாா். ஆனால், பலவித சூதாட்டங்கள் நடைபெறத்தான் செய்கின்றன.

மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவு: தமிழக முதல்வரின் அரசு, மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவான அரசு. ஆனால், மதுவை தமிழகம் மட்டும் ஒழிக்க இயலாது. அனைத்து மாநிலங்களும் சோ்ந்தால்தான் ஒழிக்க முடியும்.

அது மத்திய அரசு கையில் இருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் ஆதிதிராவிடா்கள் மீதான வன்முறை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆளுநா் கூறியுள்ளாா். பட்டியலினத்தவா் என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்றாா் அமைச்சா் ரகுபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.