முகப்பு
தற்போதைய செய்திகள்

விமான சாகச நிகழ்ச்சி கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது.

Updated On : 6 அக்டோபர் 2024, 10:18 pm IST
பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருந்து பாா்வையிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அவரது மனைவி துா்கா ஸ்டாலின், விமானப் படைத் தலைமைத் தளபதி மாா்ஷல் ஏ.பி.சிங்க் உள்ளிட்டோா்.
பகிர்:

சென்னை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 72 விமானங்களில் வண்ணமயமான சாகச நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கானோா் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், இதை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என விமானப் படை விரும்பியது. இதற்காக, பொதுமக்கள் அதிகளவில் வந்து பாா்வையிட வேண்டும் என விமானப் படை அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில், விமானப் படை சாகச நிகழ்ச்சியை சென்னை மெரீனா மட்டுமின்றி, தெற்கில் கோவளம் முதல் வடக்கில் எண்ணூர் வரை கடற்கரைகளிலும், மொட்டை மாடிகளில் என 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கண்டுகளித்ததாக காவல் துறையினா் தெரிவித்த நிலையில், இந்த நிகழ்வு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

Advertisement

இந்த நிலையில், விமான சாகச நிகழ்ச்சி மக்கள் பார்வையிட தமிழக அரசு முறையான ஏற்பாடுகளை செய்யாததால், மக்கள் கூட்ட நெரிசலில் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது.

குடிநீர்,உணவு, தற்காலிக கழப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை. ரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் ஸ்டாலின் பேருந்துகளை காணவில்லை.

முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன!

இரண்டு‌ நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார். காவல்துறையினருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது!

நிர்வாகம்,கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதல்வராக தான் ஸ்டாலின் உள்ளார் என அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.