சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்ட ஹிந்தி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள ஒரு வரி பாடப்படவில்லை என சர்ச்சை கிளம்பியுள்ளது.
சென்னையில் டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற 'ஹிந்தி மாத' கொண்டாட்ட விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்.
விழாவின் தொடக்கத்தில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசைக்கப்பட்டது. அப்போது, அதில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்னும் வார்த்தை இடம்பெற்ற வரி பாடப்படவில்லை. இதில் 'திராவிடம்' என்ற சொல் இடம்பெற்றுள்ளதால் அந்த வரி தவிர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி,
'கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க தொடர்முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஹிந்தி திணிப்பு என்று கூறி தமிழக மக்களை ஹிந்தி கற்கவிடாமல் தடை செய்திருக்கின்றனர்.
தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் உலகம் முழுவதும் தமிழைக் கொண்டுசெல்ல என்ன செய்தார்கள்? தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர்.
நாட்டில் 27 மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 3-வது மொழி அனுமதிக்கப்படவில்லை. இது ஒரு பிரிவினைவாத நோக்கம். இந்த முயற்சியில் ஈடுபடுபவர்களால் இந்தியாவை பிரிக்க முடியாது. இந்தியாவின் பலமான ஓர் அங்கமாக தமிழகம் எப்போதும் இருக்கும்' என்று பேசியுள்ளார்.
ஹிந்தி மாதம்
தமிழகத்தில் 'ஹிந்தி மாதம்' கொண்டாட்டத்தைத் தவிர்க்க வேண்டும், தொலைக்காட்சி வாயிலாக ஹிந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரின.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஹிந்தி பேசாத மாநிலங்களில் ‘ஹிந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதினார்.
'இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், ஹிந்திக்கு தனி இடம் அளிப்பதும், ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
ஹிந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற ஹிந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது மத்திய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாடவேண்டும்' என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, பிற கட்சிகளும் ஹிந்தி மாத கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் ஹிந்தி கொண்டாட்ட நிறைவு விழா நடைபெறுவதையொட்டி, திமுக இளைஞரணி அந்த அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக ஆளுநர் பங்கேற்ற இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி பாடப்படவில்லை என சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
'ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்!
சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். ஹிந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்!
திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!' என்று பதிவிட்டுள்ளார்.
ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முறையாக பாடப்படவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.