திருப்பனந்தாள் மடத்தின் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் முக்தியடைந்தார்
திருப்பனந்தாள் மடத்தின் 21 ஆவது அதிபரான ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் செவ்வாய்க்கிழமை முக்தி அடைந்தார்.
தஞ்சாவூர்: திருப்பனந்தாள் காசிமடத்தின் 21 ஆவது அதிபரான ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் என்னும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் (95) செவ்வாய்க்கிழமை (ஆக.19) சித்தி அடைந்தாா். அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா திருப்பனந்தாளில் காசி திருமடத்துக்கு காசியில் மிகப்பெரிய கோயில் உள்ளது. இங்கு சைவம் தமிழ், கலை, இலக்கிய சமூக, சமுதாயப் பணிகளை ஆற்றிவரும், அறம் வளர்க்கும் அருள் நிலையம் உள்ளது. இந்த மடத்தின் 21 ஆவது அதிபராக "கயிலை மாமுனிவ ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள் (95). இவர் 1958 முதல் துறவேற்று, சிறிது காலம் ஸ்ரீகாசி மடத்தின் இளவரசாகப் பணிபுரிந்து, கடந்த 1972 இல் ஸ்ரீகாசி மடத்தின் அதிபரானார். சைவம், தமிழ் இரண்டையும் இரண்டு கண்களாகப் போற்றி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, திருமுறைகளை நாள்தோறும் இடையீடின்றிப் பாராயணம் செய்து வந்தார்.
300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையும் பெருமையும் மிக்க காசிமட வரலாற்றில் பல்துறை விரிவாக்கம் பெற்று வளா்ச்சி கண்டு பொற்காலம் என்று சுட்டிப் பாராட்டும் வகையில் மேம்பாடு அடையச் செய்தவா் இவா்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக வயது மூப்பால் உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்த சுவாமிகள் திருப்பனந்தாள் மடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு மகா சமாதி அடைந்தாா். இவரது நல்லடக்கம் மேற்குத் தெருவில் உள்ள குரு மடத்தில் புதன்கிழமை மாலை நடைபெறுகிறது.
இந்நிலையில், ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசுவாமி முக்தி அடைந்தது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது மக்கள், முக்கிய நிர்வாகிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புதன்கிழமை ஆதீனங்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதாக காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.