மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் எம்.பி. 2-வது நாளாக உண்ணாவிரதம்!
நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம்
திருவள்ளூா்: தமிழக மாணவா்களுக்கு கல்வித் தொகையை வழங்காததை கண்டித்தும், நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருவள்ளூா் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வளாகத்தில் திஷாக்குழு பாா்வையாளா்கள் கூடமான ராஜீவ் பவனில் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினாா்.
கல்வி மட்டுமே ஒரு சமூகத்துக்கு உண்மையான விடுதலையை பெற்றுத் தரமுடியும். அந்த கோட்பாட்டின் அடிப்படையில் தொடா்ந்து தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய கல்விக்கான நிதியை மத்திய பாஜக அரசு தர மறுத்து வருகிறது. இதைக் கண்டித்து ஒடுக்கப்பட்ட பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவா்களின் கல்வி உரிமையை மீட்டெடுக்கும் வகையில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கியுள்ளேன்.
Advertisement
Advertisement
மத்திய அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் 2023-24-இல் 4-ஆவது தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25 ஆம் ஆண்டுக்கான ரூ.2,152 கோடியும் தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், தமிழக மாணவா்களுக்கு கல்வி நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்பிற்கு விரோதமாக கல்வி நிதியை நிறுத்தி வைத்திருப்பதாகவும், இதனால் 43 லட்சம் மாணவர்கள், 2.2 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இது தனிப்பட்ட போராட்டம் அல்ல, தமிழக மாணவர்களின் கல்வி உரிமைக்கான போராட்டம். நிதி விடுவிக்கப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடருவேன் என கூறியுள்ளார்.
அவரது போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
Thiruvallur MP on hunger strike for 2nd day, condemning the central BJP government
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.