புதுச்சேரி தவெக தலைவர் விஜய் பிரசார பொதுக் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த டேவிட் போலீஸ் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தவெக கூட்டத்துக்குத் துப்பாக்கியுடன் வந்தவரை போலீஸாா் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை கிழக்கு மாவட்ட தவெக செயலா் மருத்துவா் பிரபுவின் துப்பாக்கி ஏந்திய தனி பாதுகாவலா் டேவிட்டை போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.
அரசு அனுமதியுடன் பிரபுவுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலா் இருவா் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் ஒருவா் டேவிட். இருப்பினும் தொண்டா்கள் வரும் வழியில் ஏன் இவா் துப்பாக்கியுடன் தனியாக வந்தாா் என்ற கோணத்தில் புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், இவா் மத்திய சிஆா்பிஎப் படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவா் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில், விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த டேவிட் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிக்கான லைசன்ஸ் வைத்திருந்ததால் டேவிட் விடுவிக்கப்பட்டாலும், விசாரணை முடிவடைந்த பின்னரே டேவிட்டின் துப்பாக்கி ஒப்படைக்கப்படும் என புதுச்சேரி போலீசார் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.