திருப்பரங்குன்றம் மலையைக் காக்க சென்னையில் பேரணி ஏன்?- உயர் நீதிமன்றம் கண்டனம்!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரிய இந்து முன்னணி அமைப்பின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய இந்து முன்னணி அமைப்பின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் கருத்துகள், கோரிக்கைகளை வெளியிட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து திருப்பரங்குன்றம் மலையைக் காக்க வருகிற பிப். 18 ஆம் தேதி சென்னையில் 'வேல் யாத்திரை' பேரணி நடத்த இந்து முன்னணி அமைப்பு அனுமதி கோரியது.
Advertisement
இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் யுவராஜ், பேரணிக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்து வரும் நிலையில், இன்றைய விசாரணையில், 'அமைதியான முறையில் பேரணி நடத்தக் கோரியும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை' என்று மனுதாரர் தரப்பு கூறியது.
"இந்து முன்னணி அமைப்பு பேரணி நடத்த அனுமதி கோரும் பகுதி போக்குவரத்து நெருக்கடி மிகுந்தது. மேலும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து, முஸ்லீம்கள் ஒற்றுமையுடன் இருக்கின்றனர். எனவே, போராட்டத்துக்கு அனுமதி தர முடியாது" என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | உங்கள் காதலைக் கொண்டாட 10 சிறந்த மலைப்பிரதேசங்கள்!
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், "திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும், சென்னைக்கும் என்ன தொடர்பு? திருப்பரங்குன்றம் மலையைக் காக்க, சென்னையில் பேரணி நடத்த வேண்டிய அவசியம் என்ன? தேவையில்லாமல் பிரச்னையை உருவாக்கப் பார்க்கிறீர்கள்" எனக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் நீதிபதி, "திருப்பரங்குன்றம் மலையில் இந்து, முஸ்லீம்கள், ஜெயின் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதுபோன்ற போராட்டங்களால் மத நல்லிணக்கம் பாதிக்கும்.
பொது அமைதி, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த போராட்டத்திற்கும் அனுமதி வழங்கக்கூடாது.
ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்க மதரீதியான போராட்டக்காரர்கள், கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்த முடியாது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கப்பட்டால் போராட்டம் நடத்த வேண்டிய அவசியமே இல்லை" என்று கூறிய நீதிபதி, இறுதியாக பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.