சத்தீஸ்கர்: தேடப்பட்டு வந்த மூத்த பெண் நக்சல் உள்பட 2 பேர் கைது!
சத்தீஸ்கரில் பெண் நக்சல் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டதைப் பற்றி...
சத்தீஸ்கர் மாநிலம் கங்கர் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த மூத்த பெண் நக்சல் மற்றும் அவரது கூட்டாளி ஆகிய 2 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
அம்மாநிலத்தின் மாவோயிஸ்டு அமைப்பின் பிரிவுக் குழு உறுப்பினரும் மூத்த பெண் நக்சலுமான மால்தி (எ) ராஜீ (வயது 48) மற்றும் அவருக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்த ஷியாம்நாத் உசேந்தி ஆகிய இருவரும், கடந்த ஜன.11 அன்று பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் இன்று (ஜன.13) தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ராஜீயின் நக்சல் கணவரான பிரபாகர் (எ) பாலமுரளி ராவ் என்பவர் கடந்த 2024 ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டது நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஓர் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: குஜராத்: சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியர் கைது!
இந்நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட ராஜீ ரௌகாட் பகுதி மாவோயிஸ்டு பிரிவுக்கு தலைமை தாங்கியவர். அவரைப் பிடிக்க ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து பாதுகாப்புப் படையினர் தேடி வந்தனர். கடந்த சில நாள்களாக கோயாலிபேடா பகுதியில் அவரது நடமாட்டம் இருப்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் கௌடோசல்பாத் கிராமத்தில் சோதனை நடத்தியதில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் சத்தீஸ்கரில் 925 நக்சல்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.