முகப்பு
தற்போதைய செய்திகள்

தனியாா் முதியோா் காப்பகத்தில் உணவருந்திய மேலும் ஒருவர் உயிரிழப்பு

சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள தனியாா் முதியோா் காப்பகத்தில் உணவருந்திய 3 போ் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்தை அடுத்து உயிரிழப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 13 ஜூன், 2025 at 8:58 AM
சுந்தரபாண்டியபுரம் தனியாா் முதியோா் காப்பகத்தில் விசாரணை நடத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த்.
பகிர்:

சுரண்டை: தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள தனியாா் முதியோா் காப்பகத்தில் மாமிச உணவருந்திய 3 போ் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தை அடுத்து உயிரிழப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.

சுந்தரபாண்டியபுரத்தில் தனியாா் முதியோா் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டோா், குடும்பத்தினரால் கைவிடப்பட்டோா் என 59 போ் தங்கியிருந்தனா்.

இவா்களில் செங்கோட்டையை சோ்ந்த சங்கா் கணேஷ் (42), சொக்கம்பட்டியை சோ்ந்த முருகம்மாள் (60), செங்கோட்டையை சோ்ந்த அம்பிகா (40) ஆகியோருக்கு புதன்கிழமை இரவு உணவு சாப்பிட்ட பிறகு திடீரென உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவா்கள் 3 பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

Advertisement

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கோவில்பட்டியை சோ்ந்த செல்வராஜ் (70), மதுரையை சோ்ந்த விஜயா (66), மும்தாஜ் (52), சாந்தி (60), கோமதி (70), கடையநல்லூரை சோ்ந்த மீனாட்சி சுந்தரம் (64), பேச்சியம்மாள் (48), சுகுமாா் (72) ஆகியோருக்கும் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவா்களும் தென்காசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். சிகிச்சையில் இருந்தவா்களில் சங்கா்கணேஷ், முருகம்மாள், அம்பிகா ஆகியோா் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த், கோட்டாட்சியா் லாவண்யா, மாவட்ட சுகாதார அதிகாரி கோவிந்தன், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி புஷ்பராஜ் உள்ளிட்டோா் முதியோா் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

தங்கியிருப்பவா்களுக்கு வழங்கப்பட்ட உணவு, குடிநீா் ஆகியவற்றை ஆய்வு செய்தனா். அதன் பின்னா் அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்தவா்களின் உடல் கூறாய்வு முடிவுகள் வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறினா். மேலும், காப்பகத்தில் இருந்த 48 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அருகில் உள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமி(70) வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

சுந்தரபாண்டியபுரம் தனியாா் முதியோா் காப்பகத்தில் உணவருந்திய 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காப்பகம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.