சிரியாவில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் ஜெர்மனி நாட்டு தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் முன்னாள் அதிபர் பஷார் அல்-ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டு போர் துவங்கிய காலத்தில் அந்நாட்டிலிருந்த ஜெர்மனியின் தூதரகம் கடந்த 2012 ஆம் ஆண்டு மூடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சுமார் 13 ஆண்டுகள் கழித்து ஜெர்மனியின் தூதரகத்தை அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னாலேனா பயிபோக் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் இன்று (மார்ச் 20) திறந்து வைத்துள்ளார்.
இந்நிலையில், அதிபர் ஆசாத்தின் அரசு கவிழ்க்கப்பட்ட பின்னர் இரண்டாவது முறையாக சிரியாவுக்கு வருகை தந்துள்ள அமைச்சர் அன்னாலேனா, தனது வருகை சிரியா மற்றும் ஐரோப்பா, ஜெர்மனிக்கு இடையிலான புதிய அரசியல் துவக்கத்தை உருவாக்கக் கூடும் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: இஸ்ரேல் விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்! - ஹவுதி படைகள் அறிவிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 உறுப்பு நாடுகளில் கடந்த 2024 ஆம் ஆண்டு அதிபர் ஆசாத்தி ஆட்சி கவிழ்ப்புக்கு முன்னர் இத்தாலி சிரியாவிலுள்ள அதன் தூதரகத்தை மீண்டும் திறந்தது. பின்னர், அவரது ஆட்சி கவிந்து இடைக்கால அரசு அமைந்ததுடன் ஸ்பெயின் நாடும் அதன் தூதரகத்தை மீண்டும் சிரியாவில் திறந்துள்ளது.
முன்னதாக, இம்மாத துவக்கத்தில் ஆசாத்தின் ஆதரவுப் படைகளுக்கும் இடைக்கால அரசின் ராணுவத்துக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதனை சுட்டுக்காட்டி அமைச்சர் அன்னலேனா கூறுகையில், சிரியாவின் இடைக்கால அரசின் அதிபர் அஹ்மத் அல்-ஷாரா இந்த மோதல்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், 2025 மார்ச் மாத துவக்கத்தில் சிரியாவின் வடக்கு பகுதிகளை கட்டுப்படுத்தும் குர்தீஷ் அதிகாரிகளுக்கும் இடைக்கால அரசுக்கும் இடையே அதிகாரம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் எனக் குறிப்பிட்ட அமைச்சர் அன்னலேனா இதன் மூலம் மற்ற குழுக்களும் புதிய சிரியாவுடன் இணைய முடியும் என பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.