கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில் ஆத்தூர் ரமேஷ் இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். பின்னர் அங்கு நுழைந்தவர்கள் எஸ்டேட்டில் இருந்த பொருள்களை கொள்ளை அடித்து விட்டுத் தப்பிச் சென்றனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து கேரளத்தைச் சேர்ந்த மனோஜ், சயான், சதீசன், சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி உள்பட 10 பேரைக் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜின் தம்பி தனபாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் தனபால் மற்றும் அவருடைய உறவினரான சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் இந்த வழக்கில் தடயத்தை அழிக்க முயன்றது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் தனபால், ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் மூலம் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி போலீஸார், வழக்குத் தொடர்பாக இதுவரை 500-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற்றனர்.
மேலும், இதுவரை 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி, அவர்கள் கூறும் பதிலை விடியோவில் பதிவு செய்து உள்ளனர்.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜின் தம்பி தனபாலின் உறவினர் ஆத்தூர் ரமேஷ் இன்று நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்த நிலையில், ஆத்தூர் ரமேஷ் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி இருக்கிறார். ரமேஷிடம் செய்யப்படும் விசாரணை விடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.