அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி  
தற்போதைய செய்திகள்

யார் சார்..? யாரைக் காப்பாற்ற இந்த வேகம்?: இபிஎஸ் கேள்வி

யார் சார்..? என்ற கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது. யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

DIN

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், யார் சார்..? என்ற கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது. யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவதுச

நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில், நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் அதிமுக தொடர்ந்து போராட்டம் நடத்தி, மாணவியின் குரலாக மக்கள் மன்றத்தில் ஒலித்து வந்த தொடர் முன்னெடுப்புகளின் ஊடாக, தன்னிடம் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

இருப்பினும், மக்கள் மன்றத்தில் இந்த வழக்கு குறித்து, ஸ்டாலின் மாடல் அரசு மீது நிலவும் முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது ஏன்? விடுதலை மற்றும் மீண்டும் கைதுக்கு இடையில் என்ன நடந்தது?

ஞானசேகரன் வீட்டு படுக்கையறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் அளவிற்கு நெருக்கமாக இருந்த ஸ்டாலின் அரசின் அமைச்சர் மற்றும் சென்னை துணை மேயர் இந்த வழக்கில் விசாரிக்கப்படாதது ஏன்?

டிஎஸ்பி ராகவேந்திரா ரவி ராஜிநாமா செய்தது ஏன்? உயர் அதிகாரிகள் அழுத்தம் என்று வந்த செய்திகளுக்கு என்ன விளக்கம்?

இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான, இந்த வழக்கின் மூலக் கேள்வியான யார் அந்த சார்? என்ற கேள்வி, இன்னும் அப்படியே இருக்கிறது!

வழக்கு விசாரணையின் முதற்கட்டம் முடிவதற்குள்ளேயே, ஞானசேகரன் தவிர இந்த வழக்கில் யாரும் குற்றவாளி இல்லை என்று எதற்காக ஸ்டாலின் அரசின் காவல்துறை அவசர அவசரமாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்க வேண்டும்?

யாரைக் காப்பாற்ற இந்த வேகம்?. பாதி நீதியால் தப்பித்துவிடலாம் என்று எண்ணினால், அந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.

காலம் மாறும்... காட்சிகள் மாறும்... விரைவில் அதிமுக ஆட்சி அமையும். அப்போது அந்த சார் "யாராக இருந்தாலும்", கூண்டேற்றட்டப்படுவார்.

அந்த சாரை காக்கும் சார்-களையும் உடன் ஏற்றி, அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர் என பழனிசாமி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேச்சு! | Vijay full speech

ஓடிடியில் பராசக்தி எப்போது?

நாங்கள் வந்தவுடன் தில்லியே பயப்படுகிறது! - காவல்துறை மீது மமதா குற்றச்சாட்டு

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

பிரபல பாலிவுட் இயக்குநர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு!

SCROLL FOR NEXT