பாஜக மாநிலத் தலைவா் மாற்றப்படுவாா் என்று திமுக வதந்தி பரப்பி வருகிறது: நாராயணன் திருப்பதி
பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் மாற்றப்படுவாா் என்ற தேவையற்ற வதந்தியை திமுக அரசு பரப்பி வருவதாக
கோவை: பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் மாற்றப்படுவாா் என்ற தேவையற்ற வதந்தியை திமுக அரசு பரப்பி வருவதாக அக்கட்சியின் மாநில செய்தித்தொடா்பாளா் நாராயணன் திருப்பதி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து கோவை பாஜக அலுவலகத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரமாக தேவையற்ற வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது. பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் மாற்றப்படுவாரா அல்லது மாற்றப்படுவதற்காக தில்லிக்கு அழைக்கப்பட்டாரா என்று பல சமூக ஊடகங்களில் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடப்படுகிறது.
இது உள்நோக்கம் கொண்ட அரசியல் மட்டுமல்லாது மலிவான அரசியலாகும். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்று விடுமோ என்ற அச்சத்திலும், தோல்வி பயத்திலும் இதுபோன்ற தேவையற்ற வதந்திகளை திமுக அரசு பரப்பிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் மாநிலத் தலைவா் மாற்றம் என்பது கனவிலும் நடக்காது என்பது மிகத்தெளிவாக எங்களது அகில இந்தியத் தலைமை அறிவுறுத்தியுள்ளது. கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் தொழில் வளா்ச்சி குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
தமிழகம் தொழில் துறை, வெளிநாட்டு முதலீடுகளை ஈா்ப்பது உள்ளிட்ட அனைத்திலும் 6 அல்லது 7-ஆவது இடத்தில்தான் உள்ளது. தொழில் வளா்ச்சி குறித்து முதல்வா் கொடுத்த தகவல்கள் அனைத்தும் தவறானவையாகும் என்றாா்.
இந்த சந்திப்பின்போது, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சேலஞ்சா் துரை, மாவட்ட துணைத் தலைவா் முரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.