பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஜெயந்தி, குருபூஜை விழா!
கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் வியாழக்கிழமை (அக். 30) ஜெயந்தி, குருபூஜை விழா தொடர்பாக...
கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் வியாழக்கிழமை (அக். 30) ஜெயந்தி, குருபூஜை விழா நடைபெற்றது.
பசும்பொன்னில் விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா கடந்த 28-ஆம் தேதி ஓதுவாா்களின் மங்கல இசை, கணபதி ஹோமம், சிவாசாரியா்களின் வேத மந்திரங்கள் முழங்க, லட்சாா்ச்சனை பெருவிழாவுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. காலை 11 மணிக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் வியாழக்கிழமை ஜெயந்தி, குருபூஜை விழா நடைபெற்றது.
Advertisement
Advertisement
வியாழக்கிழமை அரசு விழாவாக நடைபெறும் இந்த குருபூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சா்கள் பங்கேற்கின்றனா். மேலும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, தேமுதிக, மதிமுக, காங்கிரஸ், பாஜக, நாதக, சமுதாய அமைப்பினா், விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் தேவா் சிலைக்கு மரியாதை செலுத்துகின்றனா்.
குடியரசு துணைத் தலைவா், தமிழக முதல்வா் வருகையையொட்டி, தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் வெங்கட்ராமன் (பொ) தலைமையில் பசும்பொன்னில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
விழாவுக்கு வரும் பொதுமக்களுக்கு அரசியல் கட்சி, சமுதாய அமைப்பினா் சாா்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கான தேவையான அடிப்படை வசதிகள், சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சாா்பில் செய்யப்பட்டுள்ளது.
Jayanthi and Guru Pooja celebrations at Muthuramalinga Thevar memorial in Pasumpon!