திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சர் பி.கே. சேகர் பாபு நம்பிக்கை
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி என்று அமைச்சர் சேகர் பாபு மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்திருப்பது...
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி என்று அமைச்சரும், திமுக சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளருமான பி.கே. சேகர் பாபு மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, வில்லிவாக்கம் நலச்சங்க நிர்வாகிகளுடனான ஒரு கூட்டத்தில் பங்கேற்ற சேகர் பாபு செய்தியாளா்களுடம் பேசும்போது,
ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி. அதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. எந்தவொரு அரசியல் கட்சியாலும் அதைத் தடுக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.
அரசின் மக்கள்நலத் திட்டங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளதாகவும், அறிவிக்கப்படாத திட்டங்களைக் கூட செயல்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
வட சென்னையின் வளர்ச்சிப் பணிகளைச் சுட்டிக்காட்டிய சேகர் பாபு, அந்த பகுதியின் நலனுக்காகப் பல நலத்திட்டங்களும், உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"வட சென்னை மக்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் முயற்சிகளை அங்கீகரித்து, திமுகவிற்கு தங்கள் முழு ஆதரவை வழங்குவார்கள், தமிழகத்தில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது" என்று நம்பிக்கையுடன் கூறினார்.
இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன், மகள் செந்தாமரையும் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளா்களுடன் சபரீசன் பேசும்போது, திமுகவுக்கு களத்தில் யாரும் போட்டியாக இல்லை. தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சிக்கு வரும். திமுக அரசின் வளா்ச்சித் திட்டங்கள் மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும். தவெக தலைவா் விஜய்யால், திமுகவுக்கு பாதிப்பு இல்லை என்றாா்.
முதல்முறையாக சபரீசன் திமுக நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்கேற்றுள்ளது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது; வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 6 ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7 ஆம் தேதியும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஏப்ரல் 9 ஆகும்.
காங்கிரஸ், தேமுதிக மற்றும் பிற கட்சிகளை உள்ளடக்கிய, திமுக தலைமையிலான 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி - அதிமுக தலைமையிலான 'தேசிய ஜனநாயகக் கூட்டணி ' க்கும் ' இடையேதான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கூட்டணியை வீழ்த்தும் நோக்கில், என்டிஏ கூட்டணி தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.