கோவை அருகே சிறுத்தை பீதி; தேர்தலுக்காக மக்களைப் பலிகடா ஆக்காதீர்கள்: அண்ணாமலை வலியுறுத்தல்
மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள சிறுத்தையைப் பிடித்து, மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அண்ணாமலை விடியோ குறித்து...
மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள சிறுத்தையைப் பிடித்து, மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மக்களை ஆபத்தில் விட்டுவிடக் கூடாது என்று தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விடியோ வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிப்பாளையம் கக்குராயன் மலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாள்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது. வனத்துறையும், கிராம மக்களும், சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்து, கிட்டத்தட்ட ஒரு வார காலம் கடந்து விட்டது. ஆனால், இன்னும் சிறுத்தை பிடிக்கப்படாமல் இருப்பது, மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள சிறுத்தையைப் பிடித்து, மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில்,
ஒன்னிப்பாளையம் கக்குராயன் மலை சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையும் கிராம மக்களும் உறுதி செய்து ஒரு வாரத்திற்கு மேலாகியும், இதுவரை அந்த சிறுத்தைப் பிடிபடாமல் சுதந்திரமாக உலா வருவது இந்த பகுதி மக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது.
பகலில் கூட வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் நிலையில் மக்கள் இருக்கும் போது, நிர்வாகம் எங்கே தூங்கிக் கொண்டு இருக்கிறது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தேர்தல் பணிகளில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் மூழ்கியிருக்கும் இந்தச் சூழலில், மக்களின் உயிர் பாதுகாப்பை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என அண்ணாமலை தனது பதிவில் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக வனத்துறை, உடனடியாகத் தலையிட்டு, அதிநவீன கேமரா டிராப்கள் மற்றும் தானியங்கி கூண்டுகள் மூலம் விஞ்ஞானப் பூர்வமான தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தி, பாதுகாப்பு வலை அமைத்து, சிறுத்தையைப் பிடித்து, மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வினாடியும் ஒரு உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ள நிலையில், தேர்தல் பணிகளைக் காரணம்காட்டி வனத்துறை மெத்தனமாக இருக்கக்கூடாது" என அவர் ஆவேசமாகப் பதிவு செய்து உள்ளார்.
கோயம்புத்தூர் புறநகர்ப் பகுதிகளில் மனித-வனவிலங்கு மோதல் அதிகரித்து வரும் நிலையில், அண்ணாமலையின் சமூக வலைதள பதிவு வனத்துறை அதிகாரிகள் இடையே ஒருவித அழுத்தத்தை உருவாக்கி உள்ளது.