அதிமுக வேட்பாளர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எடுபடாது: செந்தில் பாலாஜி
தொகுதி சார்ந்து அதிமுக வேட்பாளர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து குறித்து...
பொள்ளாச்சி: தொகுதி சார்ந்து அதிமுக வேட்பாளர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் நித்தியானந்தன் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி-கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு கோவை மேற்கு மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் நித்தியானந்தனை வெற்றி பெற வைப்பது இலக்காக கொண்டு அனைத்து நிர்வாகிகளும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Advertisement
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
பொள்ளாச்சி தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் பல்வேறு மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டது. அப்போது ஏன் பொள்ளாச்சி தனி மாவட்ட கோரிக்கை கேட்டு பெறவில்லை. இருக்கும்போது செய்யாமல் வந்தால் செய்வேன் என்பது எப்படி தெரியும்.
அடுத்த முறையும் அதிமுக ஆட்சி அமைக்கப் போவதில்லை என்பது அவருக்கு தெரியும் எனவே அதிமுக தலைமை எப்படி வாக்குறுதிகள் தருகின்றார்களோ அதேபோல் அதிமுக வேட்பாளரும் வாக்குறுதி கொடுக்கின்றார்.
அது மக்கள் மத்தியில் எடுபடுமா என நினைக்கின்றார். அது ஒருபோதும் எடுபடாது.
மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்.
தொகுதி சார்ந்து மாவட்டம் சார்ந்து கொடுக்கின்ற வாக்குறுதிகளை நானோ வேட்பாளரோ மாவட்ட செயலாளரும் கொடுக்க முடியும். கொள்கை ரீதியான வாக்குறுதிகளை, பொதுவான வாக்குறுதிகளை தலைமை தலைவர் தான் முடிவு எடுக்க முடியும். நாங்கள் தலைவரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம். தலைவர் அதனை பரிசீலனைக்கு செய்வார் என அவர் கூறினார்.