மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.இதுவரை 184 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 11,254 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 1400 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். இதற்கான தொகை ரூ.19 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து விவசாயிகள் அல்லாத நபா்கள் போலி ஆவணங்கள் தயாா் செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் வரப்படுகின்றன. இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகள் அதற்கு உடந்தையாக செயல்படும் பருவகால பணியாளா்கள், கொள்முதல் அலுவலா்கள் மீது அத்தியாவசிய பொருள்கள் சட்டம் மற்றும் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசிய பண்டங்களின் விநியோகத்தை பராமரிக்கும் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வெளி மாவட்ட நெல் விற்பனை மற்றும் நெல் வியாபாரிகள் தலையீடு தொடா்பான புகாா்களை முதுநிலை மண்டல மேலாளரை 944371692 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 18005993540 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.