சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டம் கோலாகலம்! நாளை ஆருத்ரா தரிசனம்!!
சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜா் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன.2) தேரோட்டம் தொடர்பாக...
சிதம்பரம்: பூலோக கைலாசம் என அழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜா் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன.2) தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து வா, வா நடராஜா, வந்து விடு நடராஜா என கோஷமிட்டு தேர்களை இழுத்தனர்.
நாளை சனிக்கிழமை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை தங்க ரதத்தில் பிச்சாண்டவா் வெட்டுங்குதிரை வாகன வீதியுலா நடைபெற்றது.
Advertisement
Advertisement
வீதிவலம் வந்த ஐந்து தேர்கள்
தொடா்ந்து, 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை (ஜன.2) நடைபெற்ற தேர்த்திருவிழாவை முன்னிட்டு சித்சபையில் வீற்றுள்ள மூலவர்களான ஸ்ரீநடராஜமூா்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவ மூா்த்திகளாக ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசுப்பிரமணியா், ஸ்ரீசண்டிகேஸ்வரா் ஆகிய ஐவரும் தனித்தனி தோ்களில் அதிகாலை எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் புறப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். அப்போது சிவ சிவா என கோஷமிட்டனர். தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாலை கீழவிதி தேர்நிலையை அடைகின்றன.
உழவாரப்பணி மற்றும் திருமுறை இன்னிசை
தேர்களுக்கு முன்பு வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணியை மேற்கொண்டனர். தேர்களுக்கு முன்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.பொன்னம்பலம் தலைமையில் சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தி சென்றனர்.
மேலும் தேரோடும் வீதிகளில் இளைஞர்களின் சிலம்பாட்டம், மாணவியர்களின் கோலாட்டம், சிவபக்தர்கள் சிவன் பார்வதி வேடமணிந்து நடணம், மேள கச்சேரி ஆகிய நிகழ்ச்சிகள் நடத்திய வன்னம் சென்றனர்.
மீனவ சமுதாயத்தினரின் மண்டகப்படி
மீனவ சமுதாயத்தில் பிறந்த பார்வதிதேவியை, சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார் என்பதால் தாய் வீட்டு சீதனமாக ஒவ்வொரு தேர் திருவிழாவின் போதும் மீனவர் சமுதாயத்தினர் சார்பில் தேரோட்டத்தின் போது சீர் அளிப்பது வழக்கமாக உள்ளது. இதனை முன்னிட்டு முன்னதாக மாலை 3 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கு, அம்பாளுக்கும் சீர் அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் இரவு ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் சென்றனர். அங்கு இருவருக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.
முன்னதாக மேலவீதி நகராட்சி வளாகம் முன்பு நகராட்சி சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் த.மல்லிகா, பொறியாளர் சுரேஷ், பேராசிரியர் ராமநாதன், நகரமன்ற உறுப்பினர்கள் த.ஜேம்ஸ் விஜயராகவன், அப்புசந்திரசேகரன், ஏஆர்சி.மணிகண்டன், திமுக நகர துணை செயலாளர்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை செய்தனர்.
நாளை மகாபிஷேகம், ஆருத்ரா தரிசனம்
ஜன.3 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும். ஸ்வர்ணாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது. அதனையடுத்து பஞ்சமூா்த்திகள் வீதியுலா வந்த பின்னா், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகின்றன.
ஜன.4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு பஞ்ச மூா்த்திகள் முத்துப்பல்லக்கு வீதியுலாவும், ஜன.5 ஆம் தேதி திங்கள்கிழமை ஞானப்பிரகாசா் திருக்குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகின்றன.
விழா ஏற்பாடுகளை உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் த.சிவசுந்தர தீட்சிதர், துணைச்செயலாளர் சிஎஸ்எஸ்.வெங்கடேச தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் கே.சிவாநாத் தீட்சிதர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
விழுப்புரம் சரக டிஐஜி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேரடி மேற்பார்வையில் சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் எஸ்.சிவானந்தன், கே.அம்பேத்கர் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை நகராட்சி ஆணையர் த.மல்லிகா, பொறியாளர் சுரேஷ் ஆகியோர் செய்தனர்.
காவலர்களுக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ், என்சிசி மாணவர்கள் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
The Chidambaram Sri Nataraja Temple chariot festival is in full swing. Arudra Darshan is tomorrow
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.