கலைத்துறையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராஜா ஸ்தபதி!
கலைத்துறையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட ராஜா ஸ்தபதி...
கலைத்துறையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட ராஜா ஸ்தபதி தெரிவித்தார்.
சிற்பக்கலைத் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் சேலத்தைச் சேர்ந்த காளியப்ப கவுண்டர் ராஜா ஸ்தபதி 4000-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைகளை வடித்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் சிலைகளை நிறுவி வருகிறார்.
இந்த நிலையில், 2026-ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுக்கு தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சார்பில் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய அரசு அறிவித்துள்ள 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலில் இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்தபதி ராஜா கூறியதாவது:
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சிற்பக்கலை தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். 4000-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைகளை வடிவமைத்து உள்ளேன். சமீபத்தில் குடியாத்தத்தில் உள்ள மகாதேவ மலையில் 18 அடி உயர நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது உலக அளவில் பெருமளவில் பேசப்பட்டது. இதுபோன்ற பல்வேறு சிற்பக் கலைகளை வடிவமைத்து ஆலயங்களில் பிரதிஷ்டை செய்து வருவதாக தெரிவித்தார்.
மேலும். இளைய தலைமுறையினர் சிற்பக் கலைகளை தொடர வேண்டும். இந்தியாவில் தமிழகம் சிற்பக் கலையில் சிறந்து விளங்குகிறது. இதை அடுத்த நகர்வுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார் .
பத்மஸ்ரீ விருது கிடைப்பதற்கு காரணமான இறைவனுக்கும் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.