திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் வெளியேறியது ஏன்? - வீரபாண்டியன் விளக்கம்
திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் வெளியேறியது குறித்து...
தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் தொடர முடியாத நிலை உள்ளது. இதைவிட அழுத்தமாக சொல்ல முடியாது என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வியாழக்கிழமை செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது, முதல் பிரதமர் நேருவை விட அதிக நாள்கள் ஆட்சி பொறுப்பில் இருந்த பிரதமர் நரேந்திர மோடியை புகழ்கின்றனர். பாராட்டுகின்றனர்.
Advertisement
Advertisement
ஆனால் நேருவை வசைபாடுகின்றனர். அவர்தான் நாடு பின்னோக்கி செல்ல காரணம் என சொல்வது சரியல்ல.
பின் தங்கி இருந்த இந்தியாவை , ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் முன்னேற்றங்கள் அடைய செய்தவர் நேரு. சாராபாய், அப்துல்கலாம் போன்றவர்கள் கிடைக்க அடிப்படை காரணம் நேருதான்.
பிரதமரை சந்தித்த போது ஏன் சந்தித்தோம், ஏதற்கு சந்தித்தோம் என்பதை முதல்வர் சொல்ல வேண்டும். முதல்வர் ஊடகங்களை சந்தித்து விளக்க வேண்டும். ஊடகம், பத்திரிகைகள் இல்லாமல் எதுவும் இல்லை.
இடைத்தேர்தல் அறிவிக்கபட்டவுடன் அன்று உள்ள சூழல் குறித்து முடிவு செய்வோம்.
திமுக கூட்டணியில் இருந்து விலகல்
தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் தொடர முடியாத நிலை உள்ளது. கடந்த இரண்டு நாள்களாக நடத்தப்பட்ட ஆலோசனையைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் அணியாக சேர்ந்து இயங்க முடியாது என்பதால் திமுக கூட்டணியில் விலக முடிவு செய்யப்பட்டது. தற்போது திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை. இதைவிட அழுத்தமாக சொல்ல முடியாது என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
மேலும், திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் ஜனநாயக கட்சிகள். தமிழகத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். தவிர்த்து மற்றவர்கள் எங்களுக்கு நட்பு சக்தி தான்.
மக்கள் குரலுக்கு மத்திய அரசு செவிமடுக்க வேண்டும்
நீட், சிபிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து மக்கள் எழுப்பும் குரலுக்கு மத்திய அரசு செவிமடுக்க வேண்டும்.
100 நாட்கள் வேலை திட்டத்தை மத்திய அரசு கடந்து செல்லக் கூடாது.
18 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டம் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும். மேலும், கடந்த ஆளுநரை போல இந்த ஆளுநரும் செயல்படக்கூடாது.
விவசாயிகளின் கடன் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்
5 ஏக்கர் வரை விவசாயிகளின் கடன் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசின் கடமை
தமிழகத்திற்கு தேவையான நிதியினை மத்திய அரசு வழங்கிட வேண்டும். மாநிலங்களுக்கான நிதியை வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
முதல்வர் உறுதியாக இருக்க வேண்டும்
இரு மொழி கொள்கையை சிதைக்க மத்திய அரசு முயல்கின்றது. இரு மொழி கொள்கையில் முதல்வர் உறுதியாக இருக்க வேண்டும்
மத்திய அரசு நடவடிக்கை வேண்டும்
சிறு,குறு தொழில் முனைவோரை அழைத்து மின்கட்டணம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முதல்வர் பேச வேண்டும். மதுரை,கோவை மெட்ரோ திட்டங்களை தொடர மத்திய அரசு நடவடிக்கைகள் வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தவெக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வரும் நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் என ஒவ்வொரு கட்சியாக திமுக கூட்டணியில் இருந்து விலகி வருவது தமிழக அரசியல் பெரும் பேசும்பெருளாக உள்ளது.