தவெக கூட்டணியில் இல்லை! பிரவீண் சக்ரவர்த்தி பதிவுக்கு இந்திய கம்யூ. பதில்!
பிரவீண் சக்ரவர்த்தி பதிவுக்கு இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பதில்
பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்ட தவெகவின் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை என்று கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தவெக அரசு அமைந்துள்ள நிலையில் மாநிலங்களவையில் காலியாக உள்ள இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி நேற்று (ஜூன் 4) அறிவிக்கப்பட்டார்.
தொடர்ந்து, பிரவீண் சக்ரவர்த்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ.) கூட்டணியின் முதல் எம்.பி. வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் தவெகவின் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை என்று கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்டுள்ளது போன்று தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறவில்லை.
தமிழக வெற்றிக் கழக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரவீண் சக்ரவர்த்தி தனது வலைதள பதிவில் “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியின் சார்பில்” தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ளது போல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இது தவறானது.
இத்தகைய கூட்டணி அமைப்பது குறித்தோ, குறிப்பிட்ட இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை நாடவில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிடம் இது குறித்து கலந்து கொள்ளவும் இல்லை, கருத்துக் கேட்கவும் இல்லை.
அத்தகைய, “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி” பற்றி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதுவும் தெரியாது. நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவான தவெக ஆட்சி அமைக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை வழங்கியது. ஆளுநர் ஆட்சி அல்லது மறைமுகமான பாஜக ஆட்சி அமைந்துவிடக் கூடாது, மத்திய அரசின் சதி திட்டங்களுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பளித்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் இந்த ஆதரவை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அளித்துள்ளது.
பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்டுள்ளது போன்ற ஓர் கூட்டணியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை என்பதை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகமும் தவெக கூட்டணியில் நாங்கள் இடம்பெறவில்லை என்று மறுப்பு தெரிவித்ததுடன் கண்டனமும் தெரிவித்துள்ளார்.