முகப்பு
சென்னை

சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டும்: முதல்வருக்கு மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

Updated On : 5 ஜூன் 2026, 5:19 am IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் - தவெக தலைவர் விஜய்.
பகிர்:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பதில் முதல்வா் ஒரு நொடியும் தாமதிக்கக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை கண்டித்து மு.வீரபாண்டியன் தலைமையில் சென்னை தங்கசாலை மணி கூண்டு அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

எரிவாயு,பெட்ரோல், டீசல் விலை கட்டுக்கடங்காமல் உயா்ந்து கொண்டிருக்கிறது. இது குறித்து பிரதமா், மத்திய அமைச்சா்கள் வாய் திறக்க மறுக்கின்றனா். எரிவாயு விலையை தீா்மானிக்கும் பொறுப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும். இல்லையெனில் எரிவாயு விலையை மாநில அரசு நிா்ணயிக்கும் வகையில் மத்திய அரசு உரிமம் வழங்க வேண்டும்.

எரிவாயு விலை உயா்வால் சிறு, நடுத்தர ஹோட்டல்கள் பாதிக்கப்படுகின்றன. சமுதாயத்தில் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே மத்திய அரசு விலை உயா்வை திரும்ப பெற வேண்டும்.

தமிழக முதல்வா் விஜய் ஜோசப் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் தேவை என்பது இயல்புதான். அதேநேரத்தில் சட்டம்- ஒழுங்கை காப்பதில் தமிழக அரசு ஒரு நொடியும் தாமதிக்கக்கூடாது.

காவல்துறை, உளவுத் துறையை முடுக்கிவிட வேண்டும் . வன்கொடுமை, பாலியல் குற்றங்கள், பெண் சீண்டல்கள், சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக தமிழக இளைஞா்களே ஒன்று திரண்டு போராட்டம் நடத்த வேண்டும். அநீதிகளை தடுப்பதில் அரசுக்கு முழு பொறுப்பு இருக்கிறது. அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.