பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் அணி! வலுக்கும் எதிர்ப்பு... எக்ஸ் பக்கம் முடக்கம்!!
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதைப் பற்றி...
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
ஐபிஎல், பிபிஎல், சிபிஎல் போன்று டி20 லீக் போட்டிகளுக்கு மாற்றாக நூறு பந்துகளைக் கொண்ட பிரிட்டனை மையமாகக் கொண்டு தி ஹண்ட்ரட் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் பர்மிங்காம் பீனிக்ஸ், லண்டன் ஸ்பிரிட், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ், சன்ரைசர்ஸ் லீட்ஸ், ட்ரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் வெல்ஷ் ஃபயர் உள்ளிட்ட எட்டு அணிகள் இருக்கின்றன. இதில், நான்கு அணிகளை இந்தியாவை மையமாகக் கொண்டுள்ள ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பங்குகளை வைத்துள்ளனர்.
இந்தத் தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான ஏலம் நேற்று (மார்ச் 12) லண்டனின் பிகாட்லி லைட்ஸில் நடைபெற்றது. சன்ரைசர்ஸ் அணிக்காக உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் டேனில் வெட்டோரி உள்ளிட்டோர் ஏலத்தில் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். இந்த அணிக்கு கேப்டனாக ஹாரி ப்ரூக் செயல்பட்டு வருகிறார்.
இந்த ஏலத்தில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதை 1.90 லட்சம் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் ரூ. 2.34 கோடி) ஏலத்தில் வாங்கியது சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி.
27 வயதான அப்ரார் அகமது, கடந்த 2024 ஆம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 38 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 52 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
மற்ற பாகிஸ்தான் வீரர்கள் உஸ்மான் தாரிக்கை பிர்மிங்காம் போனிக்ஸ் அணியும், சதாப் கான், சைம் அயுப், ஹாரிஸ் ரௌஃப் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்படவில்லை.
மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனப் பங்குகளை அதிகமாகக் கொண்டுள்ள இந்த அணிகள், ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களை தங்கள் அணியில் எடுக்கமாட்டார்கள் என்ற தகவல்கள் முன்பு வெளியாகியிருந்தன. மேலும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், தி ஹன்ட்ரட் உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களைப் புறக்கணிக்கக்கூடாது என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு கிரிக்கெட் போட்டித் தொடர்கள் எதுவும் நடைபெறவில்லை. மேலும், 2009 ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் யாரும் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில், சன்ரைசர்ஸ் அணி தரப்பில் பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் ஒப்பந்தம் செய்திருக்கும் நிலையில், சன்ரைசர்ஸ் அணிக்கு எக்ஸ் பக்கத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், #ShameOnSRH, #BoycottSunrisers உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் அணி வீரரை ஏலத்தில் ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.