முகப்பு
தற்போதைய செய்திகள்

திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு; மக்கள் பாடம் புகட்டுவார்கள்: நயினார்

திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தது குறித்து...

Updated On : 18 மார்ச், 2026 at 8:57 AM
நயினார் நாகேந்திரன்
பகிர்:

திருநெல்வேலி: தமிழகத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்குப் சீர்கேடு, தேர்தல் கூட்டணிகள் மற்றும் திமுக அரசின் தோல்விகள் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

பாஜகவில் இணைந்த திமுகவினர்

திருநெல்வேலியில் புதன்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பேரையூரைச் சேர்ந்த திமுக கலை இலக்கியப் பிரிவு அமைப்பாளர் ஆர்.கே. ராஜா தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திமுகவில் இருந்து விலகி பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களை வரவேற்ற நயினார் நாகேந்திரன், கட்சிக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டினார்.

நான் கருத்துச் சொல்ல ஏதுமில்லை

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "தவெக தனித்துப் போட்டியிடுவது அல்லது கூட்டணி வைப்பது என்பது அவர்களின் உரிமை. இதுகுறித்து நான் ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்திவிட்டேன். திமுக எப்படித் தனித்துவமாகக் கூட்டணி அமைத்துச் செயல்படுகிறதோ, அதேபோல அவர்களும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இதில் நான் கருத்துச் சொல்ல ஏதுமில்லை" என்றார்.

திமுக கூட்டணி பலமானதா?

திமுக கூட்டணி பலமானது என்ற பேச்சை மறுத்த நயினார் நாகேந்திரன், "மக்களிடம் இது குறித்துப் பேச்சு இல்லை, நீங்கள்தான் (ஊடகங்கள்) கேட்கிறீர்கள். எவ்வளவு பெரிய பணபலம் இருந்தாலும், இந்தியாவை டாட்டாவோ பிர்லாவோ ஆள முடியாது. திமுகவிடம் ரூ.50,000 முதல் 60,000 கோடி பணம் இருக்கலாம், ஆனால் மக்கள் மனம் யாரிடம் இருக்கிறது என்பதுதான் முக்கியம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை" என்று விமர்சித்தார்.

வாக்குறுதிகள் மற்றும் பொருளாதாரச் சுமை

திமுக அரசு மீது அடுக்கடுக்கான புகார்களை நயினார் நாகேந்திரன் வரிசைப்படுத்தினார்.

* சொத்து வரி உயர்வு: சொத்து வரி உயர்த்தப்படாது என்று கூறிவிட்டு 300 மடங்கு உயர்த்தியுள்ளனர்.

* மின் கட்டணம் உயர்வு: மின்கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என கூறிவிட்டு உயர்த்திவிட்டனர். மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு முறை இன்னமும் அமல்படுத்தப்படவில்லை.

* மத்திய அரசு நிதி: தமிழகத்திற்கு சாலைகள் மற்றும் பாலங்கள் அமைப்பதற்காக மத்திய அரசு இதுவரை ரூ.14 லட்சம் கோடி வழங்கியுள்ளது. ஆனால், மாநில அரசு எதையுமே தரவில்லை எனப் பொய் கூறுகிறது.

* ஸ்டிக்கர் அரசியல்: ரேஷன் கடைகளில் மத்திய அரசு இலவசமாக வழங்கும் பொருட்களுக்கு, மாநில அரசு தனது ஸ்டிக்கரை ஒட்டித் தங்களது திட்டம் போலக் காட்டி வருகிறது.

சட்டம்- ஒழுங்கு சீர்கேடு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சந்தி சிரிப்பதாக அவர் வேதனை தெரிவித்தார்:

கடந்த சில ஆண்டுகளில் 22 லட்சம் கிலோ கஞ்சா பிடிபட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், 8,900 படுகொலைகள் நடந்துள்ளதாகவும், அதில் 1,977 கொலைகள் பெண்களுக்கு எதிராகவும், 387 கொலைகள் குழந்தைகளுக்கு எதிராகவும் நடந்துள்ளதாகத் தரவுகளை முன்வைத்தார்.

விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கொடூரமானது.

போலீஸ் அத்துமீறல்

மேலும், சிறைக் கைதி மரணங்கள் மற்றும் காவல் நிலையத்திலேயே பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்கள் இந்த ஆட்சியில் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

தேர்தல் மற்றும் தொகுதி பங்கீடு

"தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் 12 நாள்கள் அவகாசம் உள்ளது. பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வரவுள்ளார். அவர் வந்தவுடன் தொகுதி பங்கீடு குறித்துப் பேசி இறுதி செய்யப்படும். அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து நாங்கள் ஒற்றுமையாகச் செயல்படுவோம்" என்றார். மேலும், தொகுதி மாறுவது குறித்த விமர்சனங்களுக்கு, "வேட்பு மனுத் தாக்கலுக்குப் பிறகு இதற்கு பதில் சொல்கிறேன்" எனப் பதிலளித்தார்.

சிலிண்டர் தட்டுப்பாடு

வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்துப் பேசியவர், "சர்வதேச அளவில் நிலவும் போர்ச் சூழலால் (ஈரான் வழி கப்பல் போக்குவரத்து பாதிப்பு) இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. இன்னும் 10 முதல் 15 நாள்களில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்" என நயினார் நாகேந்திரன் உறுதியளித்தார்.

summary

Law and order situation under DMK rule; people will teach them a lesson: Nayinar

முழு கட்டுரையைப் படிக்க →