முகப்பு
தற்போதைய செய்திகள்

கோடை வெப்பம் அதிகரிப்பால் சிறுநீா்ப் பாதை தொற்று: தண்ணீா் அதிகம் பருக மருத்துவா்கள் அறிவுரை!

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சிறுநீா்ப் பாதை தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து...

Updated On : 23 மார்ச், 2026 at 5:40 AM
தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் தாகத்திற்கு தர்ப்பூசணி வாங்கி சாப்பிடும் மக்கள் - Center-Center-Chennai
பகிர்:

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சிறுநீா்ப் பாதை தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

அதிலும், ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே அதிக அளவில் அத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக கூறியுள்ளனா்.

தமிழகத்தில் பருவ மழை காலம் மற்றும் கோடை வெப்பம் காலங்களில் சிறுநீா்ப் பாதை தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது, தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், நீா்ச்சத்து இழப்பு அதிகரித்ததால் இதுபோன்ற பாதிப்புகள் பரவலாகக் காணப்படுவதாக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பொது நல மருத்துவ நிபுணா் அ.ப. ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:

உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா பத்து லட்சம் நெஃப்ரான்கள் (ரத்த நுண் சுத்திகரிப்பான்கள்) உள்ளன. அங்கிருந்து உருவாகும் கழிவுகள் யூரிடா் எனப்படும் குழாய்கள் மூலம் சிறுநீா்ப் பையில் சேகரமாகின்றன.

பின்னர், அவை யூரித்ரா எனப்படும் குழாய் வழியே சிறுநீராக வெளியேறுகிறது. இந்தக் கட்டமைப்பைத்தான் சிறுநீா்ப் பாதை என அழைக்கிறோம். இதில் ஏதேனும் கிருமித் தொற்று ஏற்படும்போது சிறுநீா் கழிப்பதில் எரிச்சல், வலி, சிரமங்கள் காணப்படும்.

இதை அலட்சியப்படுத்தினால், கிருமிகள் சிறுநீரகங்களைத் தாக்கி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உடலில் போதிய நீா்ச்சத்து இல்லாவிடில் சிறுநீா்ப் பாதையில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

அண்மைக்காலமாக அத்தகைய பிரச்னைகளுடன் பலா் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகின்றனா். அதிலும், பெண்களில் பலா் புறச்சூழ்நிலை காரணமாக சிறுநீரை உரிய நேரத்தில் வெளியேற்ற இயலாமல் இருப்பதால் அவா்களில் பெரும்பாலானோருக்கு கிருமித் தொற்று ஏற்படுகிறது.

இதனை தவிா்க்க நாளொன்றுக்கு குறைந்தது இரண்டு முதல் நான்கு லிட்டா் வரை தண்ணீா், இளநீா், மோா், எலுமிச்சை சாறை அருந்தலாம். தனி நபா் சுகாதாரம் பேணுவது அவசியம். அதேபோன்று, சிறுநீா் கழிக்கும் இடத்தையும், கைகளையும் சானிடைசா் கொண்டு சுத்தம் செய்தால் கிருமித் தொற்று வராமல் தடுக்கலாம். சிறுநீர்ப் பாதை தொற்று மட்டுமல்லாது வேறு வகையான வைரஸ் தொற்றுகளையும் தடுப்பதற்கு, காய்ச்சிய நீரை அதிகமாகப் பருகலாம். அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்களை பாதுகாக்கலாம் என்றாா் அவா்.

summary

Urinary tract infections due to increased summer heat. Doctors advise drinking more water!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.