அதிகரிக்கும் கோடை வெய்யில்: வேலூர் மாவட்டத்தில் 101.3 டிகிரி வெப்பம் பதிவு!
வேலூர் மாவட்டத்தில் 101.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது தொடர்பாக...
வேலூர் மாவட்டத்தில் கோடைக்காலம் முழுமையாக தொடங்குவதற்கு முன்பாகவே வெய்யிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்று (மார்ச் 9) 101.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 101.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
மேலும், பரமத்திவேலூர் 100.4, மதுரை விமான நிலையம் மற்றும் ஈரோடு 98.6, மதுரை நகரம் 97.16 என மொத்தம் 5 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.
தமிழகத்தில் வெய்யிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களில் வேலூர் எப்போதும் முதலிடத்தில் இருக்கும். கடந்த சில நாள்களாகவே வேலூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதலே சூரியனின் கதிர்கள் சுட்டெரிக்கத் தொடங்கி விடுகின்றன.
பிப்ரவரி மாத இறுதியிலேயே வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், மார்ச் மாதமும் வெய்யிலின் அளவு ஞாயிற்றுக்கிழமை 101.3 டிகிரி ஃபாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது.
வரும் நாள்களில் வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வெளியே செல்லும் போது குடை, தொப்பி, சன் கிளாஸ் அணிந்து செல்லவும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அதிகளவு தண்ணீர் குடிக்கவும் சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.