மேற்காசிய மோதலுக்கிடையே இந்தியர்களின் பாதுகாப்பிற்கு மத்திய அரசு முன்னுரிமை: பிரதமர்
பாலக்காட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியது...
மேற்காசியாவில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில், அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பிற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளதாக, பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் ஏப். 9-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பாலக்காட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் பங்கேற்றாா்.
அப்போது, அவா் பேசியதாவது:
மேற்காசிய மோதல் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி பேசினார். மேலும், மேற்கு ஆசியாவில் நிலவி வரும் நெருக்கடியை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், நாட்டின் மீது அதன் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளின் தலைவர்களுடன் தான் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும், இதன் மூலம் அங்கு வசிக்கும் நமது சுமார் ஒரு கோடி சகோதர-சகோதரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவா்களுக்கு எந்த இடா்ப்பாடும் நேராமலிருக்க இந்திய தூதரகங்கள் அல்லும் பகலும் இடைவிடாமல் பணியாற்றுகின்றன. இத்தகைய ஒரு உணர்வுபூர்வமான விவகாரத்தில், தனது சுயநல அரசியலுக்காக வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியா்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான கருத்துகளைத் தெரிவிக்கிறது காங்கிரஸ்’ என்று அவா் கடுமையாக விமர்சித்தார்.
மாநிலத்தைச் சோ்ந்த பலா் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் நிலையில், அங்கு நிகழும் போரின் தாக்கங்களைக் குறைக்க மத்திய அரசு தீவிரமாகப் பாடுபடுகிறது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
கேரளத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் இடதுசாரி கூட்டணியும், காங்கிஸ் கூட்டணியும் இந்த மாநிலத்தைக் கூட்டாக கொள்ளையடித்துள்ளன. அவா்களுக்குள் நடைமுறை ரீதியில் ஒரு புரிதல் உள்ளது. சில ஆண்டுகளுக்கு இடதுசாரி கூட்டணி ஆட்சி நடத்தி தனது பைகளை நிரப்புகிறது. அதன் பிறகு காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்கிறது. இந்த ஏற்பாட்டுக்கு இடையே சிக்கித் தவிக்கிறது கேரளம்.
கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (யுடிஎஃப்) மாநிலத்தைக் கூட்டாக கொள்ளையடித்துள்ளன என்று குற்றஞ்சாட்டிய பிரதமா், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியால் மட்டுமே மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவும், வளர்ச்சியை உறுதி செய்யவும் முடியும் என்றும் நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தாா்.
பின்னர், திருச்சூரில் நடைபெறும் வாகனப் பேரணியில் பங்கேற்பதற்காகப் பிரதமர் அங்கு சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது; இது கட்சித் தொண்டர்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்தது. இந்த வாகனப் பேரணியின் போது, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு வாகனத்தில் 'சுவராஜ் ரவுண்ட்' வழியாகப் பயணித்த பிரதமர், சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களைப் பார்த்து கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், பல்லாயிரக்கணக்கான மக்கள் சற்றும் குறையாத உற்சாகத்துடன் அங்கு காத்திருந்தனர்.