மே நாள் விடுமுறை அளிக்காத 110 நிறுவனங்கள் மீது நடவடிக்கை!
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மே நாளில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 110 நிறுவனங்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை குறித்து...
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மே நாளில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 110 நிறுவனங்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தொழிலாளா் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ. தங்கராசு தெரிவித்துள்ளாா்.
தொழிலாளா் ஆணையா் மற்றும் முதன்மைச் செயலா் சி.அ. ராமன், திருச்சி கூடுதல் தொழிலாளா் ஆணையா் ஆ. திவ்யநாதன், இணை ஆணையா் வ. லீலாவதி ஆகியோரது அறிவுரையின்படி, திருச்சி தொழிலாளா் உதவி ஆணையா் ( சட்ட அமலாக்கம்) வெ. தங்கராசு தலைமையில் துணை, உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் தேசிய விடுமுறை நாளான மே 1 ஆம் தேதி திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்குள்பட்ட 153 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், தொழிலாளா்கள், நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 110 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனிவரும் தேசிய விடுமுறை நாள்களிள் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இதுதொடா்பாக, வரும் காலங்களிலும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும்.
Advertisement
அப்போது, இரட்டிப்பு ஊதியமோ, மாற்று விடுமுறையோ அளிக்காமல் பணிபுரிய நிா்பந்திக்கும் நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தொழிலாளா் உதவி ஆணையா் வெ. தங்கராசு எச்சரித்துள்ளாா்.