தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: ராமதாஸ், திருநாவுக்கரசர் இரங்கல்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகருமான கே. ராஜன் மறைவையொட்டி, பாமக நிறுவனர் ச. ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளது தொடர்பாக...
தமிழ்த் திரைப்பட உலகின் பிரபல தயாரிப்பாளரும், சிறந்த கதாசிரியரும், இயக்குநரும், நடிகருமான தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு பாமக நிறுவனர் ச. ராமதாஸ், காங்கிரஸ் முன்னாள் மக்களவை உறுப்பினர். சு.திருநாவுக்கரசர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தமிழ்த் திரைப்பட உலகின் பிரபல தயாரிப்பாளரும், சிறந்த கதாசிரியரும், இயக்குநரும், நடிகருமான தயாரிப்பாளர் கே.ராஜன் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன்.
Advertisement
திரைப்படத் தயாரிப்பாளராக மட்டுமன்றி, திரைப்படத் துறையின் பல்வேறு பிரச்னைகள் குறித்து துணிச்சலாக குரல் கொடுத்து வந்தவர் கே.ராஜன். தன்னம்பிக்கை, நேர்மை, மன உறுதி ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்த அவர், பொது வாழ்விலும் சமூக அக்கறையுடன் செயல்பட்ட நல்ல மனிதர்.
தமிழ்த் திரைப்படத் துறையின் நலனுக்காக தொடர்ந்து போராடிய ஒரு மனிதர் இவ்வாறு உயிரிழந்திருக்கிறார் என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது இழப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது உயிரிழப்புக்கான காரணங்களை காவல்துறை விரைந்து மற்றும் முழுமையாக விசாரித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும்.
தயாரிப்பாளர் கே.ராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது நிறுவனத்தைச் சார்ந்தவர்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ்த் திரைப்படக் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
சு. திருநாவுக்கரசர்(காங்கிரஸ்)
திரைப்பட தயாரிப்பாளரும், நடிகரும், பத்திரிகையாளருமான அருமை சகோதரர் திரு.கே. ராஜன் அவர்கள் அகால மரணமடைந்தார் எனும் செய்தி அறிந்து மனம் மிக வருந்துகிறேன்.
அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
முஹம்மது ஷிப்லி (இந்திய தவ்ஹீத் ஜமாஅத்)
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
திரைத்துறையில் தனித்துவமான கருத்துகளாலும்,சமூக அக்கறை கொண்ட பேச்சுகளாலும் அறியப்பட்ட ஆழமான சிந்தனையாளரான அவரின் மறைவு பெரிய இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறை உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், எந்த ஒரு சிக்கலுக்கும் தற்கொலை ஒருபோதும் தீர்வாகாது என்பதை அனைவரும் உணர வேண்டும். வாழ்க்கையின் கடினமான தருணங்களில் மனம் தளராமல், நமக்கு பிடித்தவர்களின் உதவியோடு அடுத்த நிலையை நோக்கி நகர்ந்து செல்வதற்கு முயற்சிக்க வேண்டும் என கூறியுள்ளார்.