கோவை சாய்பாபா கோயிலுக்கு தரிசனத்துக்கு வந்த இளம் கணவன், மனைவி இடையே திடீரெனத் தகராறு ஏற்பட்டதில், மனைவி, கணவனை சரமாரியாகத் தாக்கத் தொடங்கி விட்டார். தாக்குவதற்கான காரணத்தை விசாரித்து அறிந்தவர்களில் சிலர் அப்பெண்ணை ’ அப்படித்தான், அப்படித்தான், நல்லா சாத்து’ என்று மேலும் ஏற்றி விட இளம் மனைவி திரைப்படங்களில் வடிவேலுவைத் தாக்கும் கோவை சரளா போல அடிதடியில் பட்டையைக் கிளப்பினார். இத்தனைக்கும் அந்தப்பெண் தன் கணவனைத் தாக்க அவருக்கு உரிய காரணம் இருந்தது. இவருக்கு முன்பே பல பெண்களை மணந்திருந்த அந்தப் பெண்ணின் கணவன் அந்த மனைவிகளின் பெயரை எல்லாம் தனது கையில் பச்சை குத்தி இருந்ததாகவும், இவருடைய பெயரை மட்டும் கையில் பச்சை குத்தாததால் அதைக் கண்டு வெகுண்ட இவர் தன் கணவரை அடித்துத் துவைத்ததாகவும் தெரிய வந்திருக்கிறது. கோயிலுக்கு தரிசனத்துக்கு வந்த இடத்தில் கணவன், மனைவிக்கிடையே நடந்த இந்த அடிதடியைக் கேள்விப் பட்டு உடனே ஸ்பாட்டுக்கு விரைந்த காவல்துறையினர், கணவரைத் தாக்குவதை நிறுத்த முடியாதவராக இருந்த மனைவியிடம், கணவரின் மேல் சந்தேகமிருப்பின், உரிய ஆதாரங்களுடன் அதை அவர்களது எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில் புகாராக அளிக்கும் படி அறிவுறுத்தி அனுப்பினர்.
சம்பவத்தை வேடிக்கை பார்த்த பொதுமக்களில் சிலர் அதை தங்களது செல்ஃபோனில் விடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்ற தற்போது அந்த விடியோ வைரலாகப் பரவி வருகிறது.
இதுவரை திரைப்படங்களில் மட்டுமே காணக் கிடைத்திருந்த இப்படியான அற்புதக்காட்சி நேரில் காணக் கிடைத்ததால் தவறு செய்யும் கணவர்களுக்கொரு பாடமாக இருக்கட்டும் என்று இந்த விடியோவை பதிவேற்றியவர்கள் நினைத்திருக்கலாம்.