கரோனா பரவாமல் தடுக்க 'ஸ்மார்ட் குளியலறை'; டல்லாஸ் விமான நிலையத்தில் அறிமுகம்
அமெரிக்காவின் டல்லாஸ் விமான நிலையத்திற்காக டெக்சாஸ் அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஒரு ஸ்மார்ட் கொள்கைதான் 'ஸ்மார்ட் பாத்ரூம்' ஆகும்.
உலகெங்கிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள உலக நாடுகள் பலவும் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, அமெரிக்காவின் டல்லாஸ் விமான நிலையத்திற்காக டெக்சாஸ் அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஒரு ஸ்மார்ட் கொள்கைதான் 'ஸ்மார்ட் பாத்ரூம்' ஆகும்.
இந்த ஸ்மார்ட் குளியலறைகள் தொழில்நுட்பத்தின் சிறந்த பயன்பாடுகளில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Advertisement
இதில், மானிட்டர்கள் முதல் யு.வி.சி (UltraViolet -C) விளக்குகள் வரை தொழில்நுட்பம் நிறைந்தது. கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக முதற்கட்டமாக டல்லாஸ் / ஃபோர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையத்தில் சோதனைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன குளியலறையில் எத்தனை அறைகள் உள்ளன என்பதை பயணிகளுக்குத் தெரியப்படுத்த வெளியில் மானிட்டர்கள் இருக்கும். இதனால் பயணிகள் காத்திருக்க வேண்டியதில்லை. காலியாக இருக்கும் அறைகளை வெளியில் இருந்தே தெரிந்துகொள்ள முடியும். மேலும், ஒவ்வொரு ஸ்டால்களுக்கும் மேல் விளக்குகள் குறிகாட்டிகளாக செயல்படும். பயணிகள் கதைவை தொடவேண்டிய அவசியமேயில்லை. கதவைத் திறக்க மூட தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதேபோல, சோப்பு, டவல், டாய்லெட் பேப்பர் போன்ற கழிப்பறைப் பொருள்கள் குறைவாக இருந்தால் இதில் உள்ள சென்சார்கள், சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர்களை எச்சரிக்கும்.
விமானத்தை சுத்திகரிக்கவும், விமான நிலையத்தில் மேற்பரப்புகளை சுத்தப்படுத்தவும் உதவும் புதிய தொழில்நுட்பமும் இங்கு விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அடுத்த சில மாதங்களில், காற்றை சுத்திகரிக்கவும், தொற்று பரவாமல் தடுக்கவும் எச்.வி.ஐ.சி அமைப்புகளில் யு.வி.சி. விளக்குகள் நிறுவப்பட உள்ளதாக நிறுவனத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'முழு விமான நிலையத்தையும் மாற்றுவதற்கு தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவதே விமான நிலைய நிர்வாகத்தின் முக்கிய நோக்கம். அதன்படி, அனைத்து பகுதிகளையும் யு.வி.சி விளக்குகளுடன் மேம்படுத்தும்.
நோயை குணப்படுத்துவதை விட வராமல் தடுப்பது சிறந்தது. தற்போது தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ள நேரத்தில் தொற்று பரவா முறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். விமான நிலையத்திலும் அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படுகின்றன. பாதுகாப்பான பயண அனுபவத்தை உருவாக்க அனைவரும் உதவ வேண்டும்' என்று நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.