முகப்பு
ஸ்பெஷல்

உயர் ரத்த அழுத்தம் இருந்தால் கர்ப்பமாக முடியாதா?

உயர் ரத்த அழுத்தத்தினால் கருவுறுதலில் பாதிப்பு ஏற்படுவது பற்றி...

Updated On : 5 ஜூன், 2025 at 12:18 PM
கோப்புப் படம் - ENS
பகிர்:

உயர் ரத்த அழுத்தத்தினால் இதய பாதிப்பு மட்டுமின்றி கருவுறுதலிலும் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சாதாரணமாக மன அழுத்தம் அல்லது உடல் கோளாறுகளால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம்(BP) இன்று முதியவர்களுக்கு மட்டுமின்றி இளம் வயதினருக்கும் அதிகம் ஏற்படுகிறது. இதற்கு நகர வாழ்க்கைச் சூழல், வேலைப் பளு, நேரத்திற்கு தூங்காதது, சுற்றுச்சூழல் என பல காரணங்களைக் கூறலாம்.

இந்த உயர் ரத்த அழுத்தத்தினால் இதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்னைகள் மட்டுமின்றி தம்பதியினரின் இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement

பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் ஹார்மோன் பிரச்னைகள், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிகள், கருப்பை ஆரோக்கியம், ஆண்களுக்கு விந்தணு ஆரோக்கியம் என கருவுறாமைக்கு காரணங்கள் கண்றியப்பட்டாலும் இருவருக்கும் உயர் ரத்த அழுத்தம் இருக்கும் நிலையில் கருவுறுதலில் பாதிப்பு நிகழலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுபற்றி யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

பெண்கள் கருத்தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை உயர் ரத்த அழுத்தம் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதேபோன்று ஐவிஎப் போன்ற கருத்தரித்தல் சிகிச்சைகளிலும் ரத்த அழுத்தம் ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது.

நீங்கள் ஆரோக்கியமாக இருப்பது போன்று உணரலாம், இளமையாக சுறுசுறுப்பாக இருக்கலாம், ஆனால் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் அது கண்டிப்பாக இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

பெண்களில், உயர் ரத்த அழுத்தம், கருமுட்டையின் தரம், ஹார்மோன் சமநிலை, கரு உருவாதலில் பிரச்னையை ஏற்படுத்தும். ஆண்களில் உயர் ரத்த அழுத்தம், விந்தணுக்களின் எண்ணிக்கையையும் இயக்கத்தையும் குறைக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

தம்பதிகள் இதுபற்றி பீதியடைய வேண்டாம். 30 வயதைத் தொடும் நிலையில் உள்ள பெண்கள், 30 வயதுக்கு அதிகமுள்ள ஆண்கள் ரத்த அழுத்தத்தை தொடர்ந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக கருத்தரிக்கத் திட்டமிடும் தம்பதியினர் இருவரும் அதற்கு முன்னதாக மருத்துவப் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.

சத்தான உணவுகள், உடற்பயிற்சி என ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்.

கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் அது கருவை பாதிக்கும். கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும். கரு வளர்ச்சி தடைபடுதல், முன்கூட்டியே பிரசவம், அதிகபட்சமாக ப்ரீக்ளாம்ப்சியா (குழந்தையின் வளர்ச்சி தடைபட்டு தாய் உயிருக்கே ஆபத்து ஏற்படுவது) என்ற நிலைமைக்கு வழிவகுக்கும். அதேபோன்று ஐவிஎப் சிகிச்சை முறைக்கும் தொடர்ச்சியான ரத்த அழுத்த கண்காணிப்பு அவசியமென்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments