சின்னத்திரை மின்னல்கள்!
"பாரதி கண்ணாம்மா' தொடரில் நாயகி கண்ணம்மாவை கலங்கடிக்கும் வில்லி வெண்பாவாக வந்து ரசிகர்களை சினம் கொள்ள செய்பவர் ஃபரீனா ஆசாத். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர் இவர்.
டிரெண்டிங்கில் வெண்பா!
"பாரதி கண்ணாம்மா' தொடரில் நாயகி கண்ணம்மாவை கலங்கடிக்கும் வில்லி வெண்பாவாக வந்து ரசிகர்களை சினம் கொள்ள செய்பவர் ஃபரீனா ஆசாத். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர் இவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்திருக்கும் ஃபரீனாவுக்கு சிறு வயதிலிருந்தே "பெப்சி' உமா போன்று நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆக வேண்டும் என்பது ஆசையாம். இந்நிலையில்தான் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான "ஒரு நிமிடம் பிளீஸ்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்புகிட்ட, தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமானார். அதன்பின்னர், "கிச்சன் கலாட்டா', "சினிமா ஸ்பெஷல்', "பிரபலங்களின் பேட்டி', "அஞ்சறை பெட்டி' போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில், அவரது நண்பரும் விளம்பரப்பட இயக்குநருமான ரகுமானை காதல்திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "அழகு' தொடர் மூலம் சின்னத்திரை நடிகையாக களமிறங்கினார். அதன்பின் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் "தெறி' என்ற தொடரில் வாய் பேசமுடியாத பெண்ணாக வாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சோஷியல் மீடியாவில் அதிக டிரண்டிங்கில் இருக்கும் இத் தொடரின் நாயகி கண்ணம்மா அளவுக்கு ஃபரீனாவுக்கும் வரவேற்பு கூடியுள்ளதாம். இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் வெண்பா.
இயக்குநர் ஆவதே லட்சியம்!
"தேவர்மகன்' படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா. சென்னையில் பிறந்து வளர்ந்த நீலிமாவுக்கு, பள்ளிப் பருவத்தில் இருக்கும்போது "ஒரு பெண்ணின் கதை' என்ற தொடரின் மூலம் சின்னத்திரை வாய்ப்பு வர, சின்னத்திரை நடிகையானார். அதன்பின்னர், "மெட்டி ஒலி', "கோலங்கள்' போன்ற பல தொடர்களின் மூலம் பிரபலமாகி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தையும் பிடித்தார் நீலிமா. இந்நிலையில், திரைப்படங்களிலும் தனது பயணத்தைத் தொடர்ந்தார். "நான் மகான் அல்ல', "சந்தோஷ் சுப்பிரமணியம்', "பண்ணையாரும் பத்மினியும்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
நீலிமாவின் கணவர் இசைவாணன். இவர்களுக்கு அதிதி இசை என்ற மகள் இருக்கிறார். இறுதியாக "அரண்மனை கிளி' தொடரில் துர்கா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வந்தவர், திடீரென அத்தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார். அதன்பின்னர், சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அதனை நிர்வகித்து வருவதுடன், தற்போது பல யூ-டியூப் சேனல்களின் நேர்காணல் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வரும் நீலிமாவுக்கு விரைவில் இயக்குநராக வேண்டும் என்பதே லட்சியமாம்.