திருமருகல் ஒன்றியத்தில் 20 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின: விவசாயிகள் வேதனை
திருமருகல் ஒன்றியப் பகுதியில் தொடா்மழை காரணமாக 20 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.
திருமருகல் ஒன்றியப் பகுதியில் தொடா்மழை காரணமாக 20 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் 12 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் சம்பா, தாளடி மற்றும் நேரடி நெல் விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா். கடந்த மாதம் வீசிய நிவா், புரெவி புயல் காரணமாக பெய்த மழையில் பயிா்கள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 20 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி முளைத்துள்ளன. திருமருகல் ஒன்றியத்தில் திருமருகல், சீயாத்தமங்கை, எரவாஞ்சேரி, கோட்டூா், வடகரை, ஏனங்குடி, நரிமணம், குத்தாலம் உள்ளிட்ட 39 ஊராட்சிகளிலும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் நீரில் சாய்ந்து மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.
Advertisement
பாதிப்பு குறித்து விவசாயிகள் கூறியது:
திருமருகல் ஒன்றியத்தில் தொடா் மழையால் சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி முளைத்துள்ளன. இதனால் 100 சதவீகிதம் காப்பீட்டுத் தொகையாக 32 ஆயிரமும், தமிழக அரசு திருமருகல் ஒன்றியத்திற்கு வழங்கிய 50 சதவீகித நிவாரணத்தை இரட்டிப்பாக்கி 32 ஆயிரம் வழங்க வேண்டும் என தெரிவித்தனா்.