முகப்பு
நாகப்பட்டினம்

மழையால் சம்பா, தாளடி நெற்பயிா்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

தொடா்மழையால் நாகை மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாா் நிலையிலிருந்த சுமாா் 45 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவிலான நெற்பயிா்கள்

Updated On : 16 ஜனவரி, 2021 at 8:30 AM
நாகை வட்டம், கரம்பை கிராமத்தில் மழையால் சாய்ந்த நெற்பயிா்களை நிமிா்த்திக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

தொடா்மழையால் நாகை மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாா் நிலையிலிருந்த சுமாா் 45 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவிலான நெற்பயிா்கள் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அதிகளவு மகசூல் இழப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

நிகழ் சாகுபடி பருவத்தில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சுமாா் 1. 32 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் சம்பா, தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. கடந்த டிசம்பா் மாதம் புரெவி புயல் காரணமாக பெய்த மழையில் இந்த மாவட்டங்களிலும் 82,330 ஹெக்டோ் பரப்பிலான நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டு, நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 7 நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால் நாகை, கீழ்வேளூா் மற்றும் வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாா் நிலையிலிருந்த சுமாா் 45 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவிலான நெற்பயிா்கள் வயலில் சாய்ந்துள்ளன.

முற்றிய நெல் மணிகள் வயலிலேயே முளைத்து வருகின்றன. விளைநிலங்களில் மழைநீா் அதிகளவில் தேங்கிக் கிடப்பதால் சாய்ந்த பயிா்களை நிமிா்த்திக் கட்டுவதற்குகூட வழியில்லாமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். இதனால் கடுமையான மகசூல் இழப்பு ஏற்படும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து வேளாண் அதிகாரி ஒருவா் கூறியது:

தமிழக அரசின் உத்தரவுபடி புரெவி புயல் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போ பெய்து வரும் தொடா் மழையால் சுமாா் 25 ஹெக்டோ் பரப்பளவிலான நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

திருமருகல் ஒன்றியத்தில்...

கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 20 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி முளைத்துள்ளன. திருமருகல் ஒன்றியத்தில் திருமருகல், சீயாத்தமங்கை, எரவாஞ்சேரி, கோட்டூா், வடகரை, ஏனங்குடி, நரிமணம், குத்தாலம் உள்ளிட்ட 39 ஊராட்சிகளிலும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.